ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மும்பை மாடல் அழகியிடம் ரூ.8½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த நடித்து வரும் ஜெயிலர் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை வெர்சோவா பகுதியில் வசித்து வரும் சன்னா சுரி (வயது 29) என்ற மாடம் அழகியை தொடர்பு கொண்ட பியூஷ் ஜெயின் என்பவர், பிளாக்கிளாத் ஈவன்ட்ஸ்' என்ற சமூக வலைத்தள கணக்கில் இருந்து மாடல் அழகியை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டார்.
அப்போழுது நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடிக்க ஆட்கள் தேவைப்படுவதாகவும், இதில் பெண் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் மாடல் அழகியிடம் கூறினார்.இதனையடுத்து மாடல் சன்னா சுரி
அவரது தாய் வன்னிதாவிடம் தெரிவித்து பியூஷ் ஜெயினை தொடர்பு கொண்டு பேசியபோது தன்னை ஒரு காஸ்டிங்க் டைரக்டர் என கூறியுள்ளார்.
மேலும் சன்னா சுரியை போலீஸ் உடையில் நடிக்க வைத்து வீடியோ அனுப்பும்படியும் கூறினார். அடுத்த சில நாட்களில் பியூஷ் ஜெயின் வன்னிதாவை மீண்டும் தொடர்பு கொண்டு ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் பெண் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உங்கள் மகள் தேர்வாகிவிட்டதாக தெரிவித்தார். இதனால் வன்னிதாவும், அவரது மகள் சன்னா சுரியும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அந்த போஸ்டரை மாடல் அழகி அவரது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் இன்னொருவரான சமீர் ஜெயின் என்பவரும் தன்னை காஸ்டிங் இயக்குனர் என கூறிக்கொண்டு மாடல் அழகியுடன் பேசினார். பின்னர் பியூஷ் ஜெயின், சமீர் ஜெயின் ஆகிய 2 பேரும் சேர்ந்து, இன்னும் 3 பிரபல நடிகர்களின் படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தையை கூறியதால் மாடல் அழகியும், அவரது தாயும் உற்சாக வெள்ளத்தில் மிதந்த வேளையில், காஸ்டிங் இயக்குனர்கள் என கூறிக்கொண்ட 2 பேரும் சேர்ந்து, நீங்கள் ரஜினிகாந்த் உள்பட பிரபல நடிகர்களுடன் வெளிநாட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள விமான டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறி ரூ.8 லட்சத்து 48 ஆயிரத்தை பெற்றுள்ளனர்.
இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் ஜெயிலர் படத்தின் உதவி இயக்குனர் ஒருவர் மாடல் அழகியின் தாய் வன்னிதாவை தொடர்பு கொண்டு பேசினார். அவர், மாடல் அழகி சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருப்பது ஜெயிலர் படத்தின் போலி போஸ்டர் என்ற திடுக் தகவலை தெரிவித்தார். நீங்கள் நினைப்பதை போல ஜெயிலர் படத்தில் நடிக்க உங்கள் மகளை தேர்வு செய்யவில்லை எனவும், பியூஷ் ஜெயின், சமீர் ஜெயின் ஆகிய 2 பேருக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் தெரிவித்தார்.இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சன்னா சுரி மற்றும் அவரது தாய் இது குறித்து மும்பை வெர்சோவா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோசடி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajinikanth, Tamil cinema news