முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை... உலகநாயகன் கமல்ஹாசனின் சினிமா பயணம்!

களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை... உலகநாயகன் கமல்ஹாசனின் சினிமா பயணம்!

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

திரை வாழ்க்கை முடிந்தது என பலரும் நினைத்த தருணத்தில் விக்ரம் திரைப்படத்தின் மூலம் தமிழக திரை உலகம் காணாத வசூலை சாத்தியப்படுத்தி ஃபேன் இந்தியா கதவை தமிழ் சினிமாவிற்கு திறந்துவிட்ட நாயகனாகவும் கமல்ஹாசனே மீண்டும் அவதாரம் எடுத்தார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவின் உலக நாயகன் என கொண்டாடப்படும் கமல் ஹாசன் இன்று 68வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். நடிகனாக 63 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கமலஹாசன், இயக்குனர், பாடகர் நடன இயக்குனர், பாடல் ஆசிரியர் திரைக்கதை ஆசிரியர் என பல்வேறு அவதாரங்கள் எடுத்து, தசாவதானியாக திகழ்கிறார். இந்நாளில் அவரது அவதாரங்களை திரும்பிப் பார்க்கலாம்.

தமிழ் சினிமா பெருமை பட எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் முதன்மையான காரணங்களுள் முக்கியமான ஒன்று கமல்ஹாசனை தமிழ் சினிமா தன்பால் கொண்டிருப்பது.

கலைஞானி என்று கொண்டாடப்படும் கமலஹாசன் உண்மையிலேயே சினிமாக்கலையில் ஞானம் கொண்டு, தமிழ் சினிமாவில் முதன் முதலில் லைவ் ஆடியோவை பயன்படுத்தியவர், முதல் முதலில் டிஜிட்டலில் திரைப்படத்தை எடுத்து காட்டியவர், முதன் முதலில் Avid தொழில்நுட்பத்தில் திரைப்படத்தை டிஜிட்டலாக எடிட் செய்தவர் என பல்வேறு தொழில்நுட்பங்களில் தமிழ் சினிமாவிற்கு வழிகாட்டியாக திகழும் கமலஹாசன் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய ஆளுமையாக மாறுவார் என்பதை யாரும் 63 ஆண்டுகளுக்கு முன்னர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.]

Also Read : சதம் அடித்தது கார்த்தியின் சர்தார்… உலக அளவில் ரூ. 100 கோடியை தாண்டிய வசூல்!

கைகளை ஏந்தி இந்த குழந்தை கண்ணீர் மல்க பாடியபோது ஒட்டுமொத்த தமிழக மக்களின் கண்களிலும் கண்ணீர் கசிந்தது. களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய அந்த அசுரப் பயணம் ஆறு தசாப்தங்களை கடந்தும் அதே வேகத்துடன் இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானபோதே அந்த திரைப்படத்திற்காக கமலஹாசனுக்கு குடியரசுத் தலைவரின் சிறப்பு விருது தேடி வந்தது. முதல் படத்தை விருதுடன் துவங்கிய கமலஹாசன் ஒவ்வொரு திரைப்படத்தையும் அங்கீகாரத்துடனே நிறைவு செய்ய வேண்டும் என கங்கணம் கட்டி ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது உழைப்பை கொட்டி வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக பார்த்தால் பசி தீரும், பாதகாணிக்கை பல திரைப்படங்களிலும் நடித்த கமலஹாசன், மீண்டும் நாயகனாக நடிக்கும் வயது வரும்வரை உதவி இயக்குனர், நடன இயக்குனர் என சினிமாவிற்குள் உள்ள நுட்பங்களை கற்று தேர்ந்தார். மலையாள திரைப்படங்கள் மூலம் தனக்கான அடையாளத்தை உருவாக்கிய கமல், மீண்டும் நாயகன் வாய்ப்பு கிடைத்து தமிழ் சினிமாவில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பின்னர் தொடர்ந்து வெற்றித் திரைப்படங்கள் அடுத்தடுத்து கொடுத்து அசத்தினார்.

இலக்கணங்களை உடைப்பதில் அலாதி பிரியம் கொண்ட கமலஹாசன் மிடுக்கான நாயகனாக நடித்து வந்த காலகட்டத்தில் பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே திரைப்படத்தில் கோமணத்துடன் சப்பாணியாக நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார். ஒட்டுமொத்த கதாநாயகன் பிம்பமும் இதன் மூலம் சிதைந்து விடும் என நண்பர்கள் எச்சரித்தபோதும் கமலஹாசன் நடிப்பின் மீது கொண்ட தீராத காதலினால் சப்பாணியாக வெற்றி பெற்று தமிழ் ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

Also read :  பிறந்தநாளை ஒருநாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை - கமல் ஹாசன்

தொடர்ந்து ஆண்டிற்கு 10 திரைப்படங்கள் வரை சராசரியாக நடித்த கமலஹாசன் குரு போன்ற ஜனரஞ்சகமான வர்த்தக திரைப்படங்களிலும் விக்ரம் போன்ற புதிய அறிவியல் திரைக்கதை முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். சத்யா, மகாநதி, குணா என ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று, அந்தந்த கதாபாத்திரங்களுக்காக கமலஹாசன் வெளிப்படுத்திய உடல்மொழி கமலுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது.

1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த இந்தியன் திரைப்படம் அதுநாள் வரை தமிழ் திரையுலகில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற சாதனையை படைத்தது. இதன் மூலம் நடிப்பில் மட்டுமல்லாமல் வசூலிலும் தனக்கு நிகராக யாருமில்லை என்பதை கமலஹாசன் அந்த ஆண்டில் நிரூபித்துக் காட்டினார். இதன் பின்னர் நகைச்சுவை திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய கமல்ஹாசன் அவ்வை சண்முகி, தெனாலி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் என தனக்கென ஒரு புது பாணியை உருவாக்கினார். இடையிடையே ஆளவந்தான், ஹேராம், அன்பே சிவம் போன்ற திரைப் படங்களில் வித்தியாசமான தன் நடிப்பையும் வெளிப்படுத்த தவறாத கமலஹாசன் கிராபிக்ஸில் ஆளவந்தானில் செய்த புதிய முயற்சி, விருமாண்டி திரைப்படத்தில் பகலிலேயே படமாக்கிய இரவு காட்சி, டிஜிட்டலின் படமாக்கிய மும்பை எக்ஸ்பிரஸ், விருமாண்டி திரைப்படத்தின் மூலம் லைவ் ஆடியோ என தமிழ் சினிமாவிற்கு முன்னோடியாக பல புதிய முயற்சிகளையும் முன்னெடுத்துச் சென்ற வண்ணம் இருந்தார்.

Also Read : குடும்பத்தினருடன் பிறந்தநாளைக் கொண்டாடிய கமல்... வைரலாகும் படங்கள்!

தசாவதாரம் திரைப்படத்தில் பத்து கதாபாத்திரங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியதுடன் தசாவதாரம் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியதன் மூலம் நடிப்பிலும் எழுத்திலும் தனது உச்சகட்ட ஆற்றலை உலகிற்கு பறை சாற்றினார் கமலஹாசன்.

நான்கு ஆண்டுகள் கமல்ஹாசன் திரைப்படம் நடிக்காமல் அரசியலில் கவனம் செலுத்திய இடைப்பட்ட காலகட்டத்தில் கமலின் திரை வாழ்க்கை முடிந்தது என பலரும் நினைத்த தருணத்தில் விக்ரம் திரைப்படத்தின் மூலம் தமிழக திரை உலகம் காணாத வசூலை சாத்தியப்படுத்தி ஃபேன் இந்தியா கதவை தமிழ் சினிமாவிற்கு திறந்துவிட்ட நாயகனாகவும் கமல்ஹாசனே மீண்டும் அவதாரம் எடுத்தார்.

top videos

    களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனது அழுத்தமான தடத்தைப் பதித்துக் கொண்டே இருக்கும் கமல்ஹாசன் ஒவ்வொரு திரைப்படத்திலும் தமிழ் சினிமாவிற்கு புது ரத்தம் பாய்ச்ச ஏதோ ஒரு வித்தியாச முயற்சியை மேற்கொண்டு கொண்டே இருக்கிறார். அந்த முயற்சியில் தோற்றாலும் ஜெயித்தாலும் அதனை முதலில் முயன்றவர் என்ற வரலாற்று பக்கத்தில் அவரது பெயர் எழுதப்பட்டு கொண்டே இருக்கிறது.

    First published:

    Tags: Indian cinema, Kamal Haasan, Kamal hassan, Kamalhaasan, Tamil Cinema