நடிகர், சமூக ஆர்வலர் என பன்முகம் கொண்ட ஆரி இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 4-வது சீசனில் கலந்து கொண்டு வெற்றியாளராக தேர்வானார். மற்ற போட்டியாளர்களிடம் ஆரம்பம் முதலே எதிர்ப்பை சம்பாதித்து வந்த ஆரிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது.
சக போட்டியாளர்கள் செய்யும் தவறை சரியான நேரத்தில் சுட்டிக் காட்டி சிறப்பாக பங்களித்ததால் ஆரி வெற்றி பெற்றதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். அவருக்கு அடுத்தபடியாக பாலாஜி முருகதாஸ் இந்த சீசனில் இரண்டாம் இடம் பிடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் அதில் கலந்து கொண்டவர்கள் பலரும் சமூகவலைதளங்கள் வாயிலாக தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி கூறி வருவதோடு ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றனர். அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் ஆரி பிக்பாஸ் வெற்றிக் கோப்பையுடன் ‘எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கே’ எனறு முதல் பதிவில் கூறினார்.
இந்நிலையில் நேற்று நடிகர் ஆரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “இந்தக் காணொலி எதற்காக என்றால் உங்கள் அனைவரையும் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் எனக் காத்திருந்தேன். எனக்கு உடல்நிலை சரியில்லை. டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் முதலே எனது உடல்நிலை சரியில்லாமல் உள்ளது.
விரைவில் உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறேன். இந்த வெற்றி என்னுடைய வெற்றி அல்ல. உங்களுடைய வெற்றி. நேர்மைக்கும் உண்மைக்கும் நீங்கள் கொடுத்த வெற்றி. இதற்காக நான் என்றைக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பேன். விரைவில் உங்களை எல்லாம் சோஷியல் மீடியா வாயிலாக சந்திக்கிறேன். என்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாக தேர்வு செய்து அன்புடன் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
ஆரியின் இந்த பதிவைப் பார்த்த பலரும் அவரை ஓய்வெடுக்கவும், நலமடைந்து திரும்ப வேண்டும் என்றும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.