அசுரன் வெற்றி விழா மேடையில் தன்னிடம் பணியாற்றும் உதவி இயக்குநர்களிடன் வெற்றிமாறன் மன்னிப்பு கோரியுள்ளார்.
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை என தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி ஹிட் அடித்த படங்களில் அசுரன் படமும் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் 100-வது நாள் வெற்றி விழா இன்று சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “இந்த நேரத்தில் இது தேவையான படம். தமிழ் மண், தமிழ் மக்களுடைய ஒற்றுமைக்கான தேவையாகத் தான் இந்தப் படத்தின் வணிக ரீதியான வெற்றி அமைந்திருக்கிறது. வணிக ரீதியான வெற்றி என்பது பாலு மகேந்திரா சார் சொல்வது போல் விபத்துதான். அதை நாம் நிகழ்த்த முடியாது. அதுவாகவே நிகழும். நேர்த்தியாக படத்தை எடுக்க மட்டுமே நம்மால் முடியும்.
எனக்கு விருப்பமில்லாத ஒன்றை எனக்கு அழுத்தம் கொடுத்து யாராலும் என்னை செய்ய வைக்க முடியாது. இந்தப் படத்தை வெற்றியடையச் செய்ததற்கு ஊடகங்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு. என்னுடைய முதல் நன்றி மீடியாக்களுக்குத் தான்.
நடிகர்களிடம் கூலாக இருப்பேன். ஆனால் நான் மிகவும் கோபப்படுவேன். என்னுடன் பணியாற்றும் உதவி இயக்குநர்களுக்கு, நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும். ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும் போதும் நான் எனது உதவியாளர்களிடம் சொல்வேன். நான் கோபப்படுவேன். அதற்குக் காரணம் உங்களுடைய தவறு அல்ல. எனக்கு ஒரு இயலாமை இருக்கும் சில வேளைகளில் அது உங்களிடம் கோபமாக வெளிப்படும். அதற்காக மன்னித்துவிடுங்கள்” என்றார்.
மேலும் பேசிய அவர், இது வரையிலான தனுஷ் கூட்டணியில் அசுரன் மிக நெருக்கமான படம் என்றும், அப்பா கதாபாத்திரம் அவ்வளவு ரசித்த பாத்திரம் என்றும், அதை உள்வாங்கி முழுமையான அர்ப்பணிப்போடு செய்து கொடுத்தாகவும் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.