தர்பார் படத்துக்கான டப்பிங் பணிகளில் நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல் கலந்து கொள்கிறார் என்று இயக்குநர் ஏ,ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் தர்பார். ஆதித்ய அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலிஸ் அதிகாரியாக வரும் ரஜினிகாந்தின் தோற்றம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தர்பார் படத்தின் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து வந்த படக்குழு படத்தின் மோஷன் போஸ்டரை தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. படம் 2020-ம் ஆண்டு பொங்களுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தர்பார் படத்துக்கான டப்பிங் பணிகளில் நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல் கலந்து கொள்கிறார் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.