நில வரிக்காக நடிகை ஐஸ்வர்யா ராய் பாக்கி வைத்துள்ள 22 ஆயிரம் ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அழகியும், திரைப்பட நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அமிதாப் பச்சனின் மகனான நடிகர் அபிஷேக் பச்சனை கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய்க்கு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் சின்னார் தாலுகாவிற்குட்பட்ட தங்கோன் கிராமத்தில் ஒரு ஹெக்டேர் நிலம் உள்ளது. இதற்கு கடந்த ஓராண்டாக ஐஸ்வர்யா ராய் நிலவரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், சம்பந்தப்பட்ட சின்னார் தாலுகா தாசில்தார், ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில்," இந்த நோட்டீஸ் கிடைத்த 10 நாட்களுக்குள் வரிப்பணம் முழுவதையும் செலுத்த வேண்டும். பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் வரி செலுத்தப்படவில்லை. நில வரி 21 ஆயிரத்து 960 ரூபாயை செலுத்தாவிட்டால் நிலவருவாய் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
இதேப்போல அங்கு நிலம் இருந்து வரி செலுத்தாதோர் 1200 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நில வரியை செலுத்தாத குற்றத்திற்காக உலகப் புகழ் பெற்ற நடிகைக்கு வரி நோட்டீஸ் வந்துள்ள விவகாரம் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துவிட்டது. உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸ் மும்பை பாலிவுட் திரையுலகில் தற்போது பேசு பொருளாக இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.