2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சாய் பல்லவி. அதற்கு முன்பே விஜய் டிவியில் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ‘மாரி 2’ படத்தில் பிரபுதேவாவின் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடனமாடியிருந்த ரவுடி பேபி பாடல் 1 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
மலர் டீச்சராக அறிமுகமாவதற்கு முன்னர் 2013- ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் ஒரு பல்கழைக்கழக விழாவில் சல்சா நடனமாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது. அதில் சாய் பல்லவியின் சல்சா நடன அசைவுகள் பார்ப்போரை கண் சிமிட்டக் கூட விடுவதில்லை. எப்போது இந்த வீடியோவைப் பார்த்தாலும் வியப்பாக இருப்பதாக பார்வையாளர்கள் பலர் கருத்து பதிவிட்டிருப்பதோடு சாய் பல்லவியையும் பாராட்டி வருகின்றனர்.
கடைசியாக தமிழில் என்ஜிகே படத்தில் நடித்திருந்த நடிகை சாய் பல்லவி 2020-ம் ஆண்டு வெளியான பாவக்கதைகள் என்ற ஆந்தாலஜியில் வெற்றிமாறன் இயக்கிய ஓர் இரவு கதையில் நடித்திருந்தார். இக்கதைக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து லவ் ஸ்டோரி, விரத பர்வம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.