குரூப் 4 தேர்வு முறைகேடு குற்றச்சாட்டு காரணமாக இனி அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கும் போது புதிய விதிமுறையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் - 4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 5,575 மையங்களில் 16,29,865 பேர் தேர்வு எழுதினர்.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் போன்ற பதவிகளுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகள் நவம்பர் மாதம் 25-ம் தேதி வெளியானது.
தேர்வில் வெற்றியடைந்தவர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல தேர்வர்கள், இந்த இரண்டு மையங்களிலும் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியானது. இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகப் பிற தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் தேர்வு எழுதிய பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை நேரடியாக அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 13-ம் தேதி காலை தொடங்கிய விசாரணை மறுநாள் வரை நீடித்தது. அந்த இரு மையங்களில் தேர்வெழுதிய பிற மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான தேர்வர்கள் ஒரே மாதிரியான பதிலைத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பந்தமே இல்லாமல் எதற்காக அந்தத் தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?' என அவர்களிடம் அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு, இறந்த உறவினர்களுக்கு திதி கொடுக்க சென்றதாகவும், ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றதாகவும் அதனால் அங்கேயே தேர்வு எழுதிவிட்டு வந்ததாகவும் கூறியுள்ளனர். தேர்வர்கள் ஒரே மாதிரி அளித்த பதிலால் அதிகாரிகள் குழப்பமடைந்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரு மையங்களில் தேர்வெழுதியவர்கள் மீது போலீசில் புகாரளித்து விசாரணைக்கு உள்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறின. எனினும், தற்போது வரை தேர்வாணையம் எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. இதில் விண்ணப்பிக்கும்போது புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதில், சொந்த மாவட்டத்தைத் தவிர வேறு மாவட்டத்தில் தேர்வு மையத்தை தேர்வு செய்யும் போது, எதற்காக சொந்த மாவட்டத்தை விட்டு, வேறு மாவட்டத்தில் தேர்வெழுத விரும்புகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இதற்கான காரணத்தை அதில் தெரிவிக்க வேண்டும்.
இந்த புதிய மாற்றத்தால் குருப் 4 தேர்வு முறைகேடு போன்ற சம்பவங்கள் தடுக்கப்படலாம் என்று தேர்வாணையம் கருதுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.