முப்படைகளிலும் ‘அக்னீபாத்’ திட்டத்தின் மூலம் ஆள்சேர்க்கை நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு பல்வேறு கேள்விகளையும் குழப்பங்களையும் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் இத்திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அக்னிபாத் திட்டம் குறித்து எழுந்துள்ள கேள்விகள் மற்றும் குழப்பங்களுக்கான விளக்கங்கள் பாதுகாப்புத்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. நிலவி வரும் பல்வேறு கேள்விகளுக்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கங்கள் பின்வருமாறு.
4 வருட பணிக்குப் பின் அக்னிவீர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக மாறிவிடுமா?
தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நிதியுதவியும், கடனுதவியும் அரசுத் தரப்பில் செய்துத்தரப்படும்.
மேற்படிப்பு படிக்க நினைப்பவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும், மேற்படிப்புக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும்.
மத்திய பாதுகாப்புப் படை மற்றும் மாநில காவல்துறையில் சேர விரும்புபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மற்ற துறைகளிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
ராணுவத்தில் இணைய விரும்பும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் அக்னிபாத் மூலமாகக் குறையுமா?
இல்லை. ராணுவத்தில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கான வாய்ப்பு இதன் மூலம் அதிகமாகும்.
தற்போது முப்படைகளில் சேர்க்கப்படும் இளைஞர்கள் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமான இளைஞர்கள் வரும் ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் சேர்க்கப்படுவார்கள்.
இதன்மூலமாக ராணுவத்தில் உள்ள குழு(ரெஜிமெண்ட்) ஒற்றுமை மற்றும் வீரர்களுக்கு இடையேயான பந்தம் குறைந்துவிடுமா?
ராணுவத்தில் உள்ள ரெஜிமெண்ட் முறைக்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அக்னிபாத் மூலமாக ரெஜிமெண்ட் உறுப்பினர்களுக்கு இடையேயான பந்தம் இன்னும் அதிகமாகும். இது படையின் ஒற்றுமையை வலுவாக்கும்.
இது முப்படைகளின் செயல்திறனைக் குறைத்துவிடுமா?
இது போன்ற குறுகிய கால பணிவாய்ப்புகள் உலகில் உள்ள பல நாடுகளில் செயல்பாட்டில் உள்ளன.
இது இளமையான செயல்திறன் மிக்க இராணுவத்தை உண்டாக்கும் முறை என்று உலக அளவில் நிரூபிக்கப்பட்டது.
Must Read: அக்னிபாத் ராணுவ வேலைவாய்ப்பு திட்டம் பயன் தருமா? விளக்கும் முன்னாள் அதிகாரி
முதல் ஆண்டு அக்னிபாத் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் ஒட்டுமொத்த ராணுவத்தின் 3% சதவீதமே. 4 வருடங்கள் முடிந்த பின் சோதனைகளுக்குப் பிறகே மீண்டும் ராணுவத்தில் அக்னீவீரர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இதன் மூலம் அதிகாரி நிலை பணிக்குப் பயிற்சி பெற்ற வீரர்கள் கிடைப்பார்கள்.
21 வயதுள்ளவர்கள் முதிர்ச்சியற்றவர்கள். அவர்கள் ராணுவத்தில் இணைவதற்கான நம்பகத்தன்மை அற்றவர்களா?
உலக அளவில் பல ராணுவங்கள் அந்நாடுகளின் இளைஞர்களை நம்பியே உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அனுபவம் வாய்ந்த, வயதில் மூத்த வீரர்களின் எண்ணிக்கையை விட இளம் வீரர்களின் எண்ணிக்க்கை அதிகரிக்கும்.
அக்னிவீர்கள் சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிப்பவர்களாக மாறிவிடுவார்களா? பயங்கரவாத இயக்கங்களில் இணைந்துவிடுவார்களா?
இது இந்திய பாதுகாப்புப் படையின் மதிப்புக்கும், மாண்புக்கும் இழுக்கு ஏற்படுத்தும் கேள்வி.
4 வருடங்கள் சீருடை அணிந்த இளைஞர்கள் நாட்டுக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணிப்பவர்களாக மாறி வெளிவருவார்கள்.
முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிக்கவில்லையா?
இரண்டு வருடங்களாக ராணுவ அதிகாரிகளிடம் விரிவான முறையில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை வடிவமைத்ததே ராணுவ அதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட தனிப்பிரிவுதான். அதை உருவாக்கியது இந்த அரசு. பல முன்னாள் அதிகாரிகள் இதை வரவேற்றுள்ளனர்.
இவ்வாறு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.