முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு: மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு: மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

  • Last Updated :

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காக உரிய சட்டம் இயற்ற வேண்டும் எனக்கோரிய வழக்கில் மத்திய அரசு மற்றும் தமிழக காவல்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குவைத்தில் வீட்டு வேலைக்காக அழைத்து செல்லப்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஆயிஷா பானு, ஷர்மிளா, லிங்கமுத்து உள்ளிட்டோரை மீட்டுத்தரக்கோரி அவர்களின் உறவினர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில், வீட்டு வேலைக்காக குவைத் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட மூவரும் , தற்போது அங்குள்ள ஒரு நிறுவனத்தில் சில மாதங்களாக உணவு, சம்பளம், அடிப்படை வசதியின்றி சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும், இதனால் அவர்களது உடல்நிலை பாதிப்படைந்துள்ளது, மேலும் பணம் கொடுத்தால் மட்டுமே அவர்களை விடுவிக்க முடியும் என குவைத் நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து குவைத்தில் உள்ள  இந்திய தூதகரத்திடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ள மூவரையும் மீட்டு தர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பெண்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லும் போலி முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சுமதி என்பவர் திருச்சி மற்றும் திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, அஜய் ரஸ்தோஹி அமர்வு, வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும், அழைத்து செல்லப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில்  பிலிப்பைன்ஸ், இலங்கை நாடுகளில் உள்ள சட்டம் போல இந்தியாவிலும் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் என்ற மனுதாரர்கள் தரப்பு கோரிக்கையை ஏற்று பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

மேலும், குவைத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழக பெண்களை மீட்பது தொடர்பாக  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலளிக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் உள்ள போலி முகவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 6 வாரத்தில் தமிழக டி.ஜி.பி. பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்

top videos

    First published:

    Tags: Abroad jobs