வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னரும் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாயும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாயும், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 400 ரூபாயும், பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் 600 ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600/- மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750/- மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000/- வீதம் மாதந்தோறும் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
குடும்ப ஆண்டு வருமானம்: இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 மேல் இருக்கக் கூடாது. வருவாய் துறையில் இருந்து வருமானச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு வருமான உச்ச வரம்பு இல்லை.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் 40 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது. ஆதிதிராவிட/ பழங்குடியின விண்ணப்பதாரர்கள் 45 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது.
வேலை வாய்ப்பின்மை: விண்ணப்பதாரர் அரசுத்துறை / தனியார் துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டவராகவோ இருத்தல் கூடாது. மேலும் விண்ணப்பதாரர் தனியாரிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ வேறு எந்த வகையிலும் எந்தவிதமான உதவித் தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது.
உதவித்தொகை காலம்: வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பித்த நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். ஆதிதிராவிட/ பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு 45 வயது வரையிலும் உதவித் தொகை வழங்கப்படும். மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை. மேலும், இந்த உதவித்தொகை பெறும் காலத்தில் பதிவைத் தொடர்ந்து புதுப்பித்து தர வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் இதற்கான விண்ணப்பபங்கள் வழங்கப்படும். தற்போது, சேலம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் விண்ணப்பங்களை அளித்து வருகின்றன.
விண்ணப்பப் படிவத்தில், தனது மாவட்டத்திற்குள் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியின் கிளையில் சேமிப்புக் கணக்கைத் (Savings Bank account) தொடங்கி கணக்கு எண். (Account Number) கிளையின் முழு முகவரி, கிளை குறியீட்டு எண் (Branch Code) உள்ளிட்ட விவரங்களை விண்ணப்பப் படிவத்தில் தெரிவிக்க வேண்டும்.
தொழிற்படிப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாமா?
இல்லை. பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம். விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப் படிப்புகள் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை வழங்கப்படமாட்டாது.
உதவித் தொகை பெறும் காலத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துவிட்டால்?
உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தெரிய படுத்த வேண்டும். பணி நியமனம் பெற்றவர்களுக்கு விதவித் தொகை நிறுத்தப்படும். மேலும், விவரங்களுக்கு இந்த அரசாணையை கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.