ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ள , 'உத்தரவாத பென்சன் திட்டத்தின் (Guaranteed Pension Scheme) முன்மொழிவுகளை மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக ஆங்கில நாளிதழான தி இந்தியன் எஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும் என்ற அரசுப் பணியாளர்கள்/ சங்கங்களின் கோரிக்கை ஓரளவுக்கு நிறைவேறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஓய்வூதியத் திட்டத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Defined Pension Scheme - பழைய பென்ஷன் திட்டம்), மற்றொன்று பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contribution based Pension Scheme).
பழைய பென்சன் திட்டத்தின் கீழ், குறைந்தது 30 ஆண்டுகள் பணியில் இருந்த அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும்போது, அவர் பெற்ற ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகாலம், ஓய்வூதியம் தொகை, குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை நன்கு வரையறுக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில், கடந்த 2001-ம் ஆண்டு ஓய்வூதியச் செலவீனங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசு உயர்மட்ட வல்லுனர் குழுவை அமைத்தது. இந்த குழு, பங்களிப்பு பென்சன் திட்டத்தை (Contribution based Pension Scheme) பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை, இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு 2002-03-ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியது
இந்த புதிய நடைமுறையின் கீழ், மத்திய அரசில் 1.1.2004 ஆம் நாள் அன்றோ அதற்கு பின்னரே பணியில் சேர்ந்தவர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுகின்றனர். இந்த பணியாளர்களின் அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியம் மற்றும் அகவிலைப் படியில் 10% பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு அதற்குச் சமமான அளவு பங்குத் தொகையை செலுத்துகிறது. இந்த தொகை பல்வேறு நிதி திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு, கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் ஓய்வூதியத் தொகை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த புதிய திட்டத்தின் கீழ், பணி ஓய்விற்குப் பின் கிடைக்கும் பென்சன் மிகக் குறைவாக இருக்கும் காரணத்தினால் அரசுப் பணியாளர்கள் மற்றும் சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்க: முதியோர்களுக்கான அரசு ஓய்வூதிய திட்டங்கள்! - விண்ணப்பிப்பது எப்படி?
இந்நிலையில், ஆந்திர முதலமைச்சரால் முன்மொழியப்பட்டுள்ள 'உத்தரவாத ஓய்வூதியத் திட்டம்’ (Guaranteed Pension Scheme) பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் பெற்று வருகிறது. திட்டத்தின் கீழ், பணியாளர்களின் ஊதியத்தில் 30% ஓய்வூதியமாக பெற வேண்டுமென்றால், பணியாளர்கள் ஊதியத்தில் இருந்து 10% அளவு செலுத்த வேண்டும். அதேபோன்று, ஊதியத்தில் 40% ஓய்வூதியமாக பெற வேண்டுமென்றால், பணியாளர்கள் தங்களது ஊதியத்தில் இருந்து 14% அளவு செலுத்த வேண்டும். அரசு அதற்குச் சமமான அளவு பங்குத் தொகையினை செலுத்தும். இதன் மூலம், சந்தை அபாயங்கள் கடந்து, சரியான அளவில் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு நம்புகிறது. அதேபோல பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள வரையறுக்கப்பட்ட அம்சத்தையும், புதிய திட்டத்தில் உள்ள பங்களிப்பு அம்சத்தையும் இந்த திட்டம் இணைப்பதால அரசு ஊழியர்களுக்கு அதிக நன்மை கிடைக்கும் என கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pension Plan