தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வேளாண்மைத் துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவி பயிற்சி வழங்கப்பட உள்ளது எனச் சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி-இன் விண்வெளி ஆராய்ச்சியுடன் இணைந்து விவசாயத் துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவி பயிற்சியை அளிக்கவுள்ளனர்.
வளர்ந்த நாடுகளில் ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்களை விவசாய நிலங்களில் தெளித்து நடைமுறைப்படுத்தும் பணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகிறது. விவசாய நிலங்களில் உள்ள பயிர்களில் பூச்சி கொல்லி நோய் தாக்கப்பட்டால் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பளவில் 25 முதல் 30 ஏக்கர் வரை மருந்துகளைத் தெளித்து முடிக்க முடியும். இதன் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10,000/- முதல் ரூ.15,000/- வரை சம்பாதிக்கலாம்.
மேலும் விவசாய பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தினால் கிராமங்களில் உள்ள மக்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியைப் பெற 18 முதல் 45 வயது நிரம்பிய ஆதிதிராவிடர்/பழங்குடியின மாணாக்கர்களும், கல்வித் தகுதியில் பத்தாம் வகுப்பு/ஐடிஐ/டிப்ளமோ/ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும், ஆதாருடன் இணைக்கப்பட்ட பாஸ்போர்ட் உரிமம் மற்றும் மருத்துவரின் உடல்தகுதி சான்றிதழ் முதலியவற்றைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சிக்கான கால அளவு 10 நாட்கள் ஆகும் (கல்வி வளாகம் மற்றும் விவசாய நிலத்தில் இப்பயிற்சி அளிக்கப்படும்) பயிற்சிக்கான மொத்த தொகை ரூ.61,100/- தாட்கோவால் வழங்கப்படும்.
இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் MIT வழியாக DGCA-இன் அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் ரிமோட் பைலட் உரிமம் வழங்கப்படும். இந்த உரிமம் 10 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாகும். இப்பயிற்சியினை பெற்றவர்கள் சொந்தமாகவோ அல்லது தாட்கோ நிதியுதவி மூலமாகவோ ட்ரோன் கருவிகளை வாங்கலாம். உழவன் செயலி மூலம் தங்கள் சேவைகளைச் சந்தைப்படுத்தலாம்.
விவசாய ட்ரோன்கள் வாங்குவதற்கு வேளாண்மைத் துறையில் உள்ள மானியம் மற்றும் கடன் திட்டங்கள் மூலமாகவும், அல்லது தாட்கோவின் ரூ.2.25 இலட்சம் மானியத்துடன் வங்கிக் கடன் அளிக்க வழி வகை செய்யப்படும். இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் தாட்கோவில் http://iei.tahdco.com/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி, தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Drone, Entrepreneurship