பொறியியல் படிப்பில் மாணவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஏற்றுக் கொண்டு, அவர் விரும்பிய இடத்தில் மேலே உள்ள இடம் கிடைக்குமா? என காத்திருக்கும் போது கட்ட வேண்டியத் தொகையின் விபரத்தை பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.
பிஇ, பிடெக் படிப்பில் சேர்வதற்கு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனடிப்படையில், விண்ணப்பித்தவர்களில் தகுதியான 1,56,278 பேருக்கான தரவரிசைப்பட்டியல் ஆகஸ்ட் 11 ந் தேதி வெளியிடப்பட்டது. அவர்களில் சிறப்பு பிரிவினருக்கு ஆகஸ்ட் 18 ந் தேதி முதல் 22 ந் தேதி வரையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 ந் தேதி முதல் நவம்பர் 17 ந் தேதி வரையில் நடைபெறுகிறது. முதல் சுற்றுக்கலந்தாய்வில் பொதுப்பிரிவு, தொழில்பிரிவு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் செப்டம்பர் 15 ந் தேதி நடைபெற்றது.
இதையும் வாசிக்க: யுஜிசி நெட் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியானது
அதில் 10,11,12 ஆகிய தேதிகளில் மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளின் பட்டியலை பூர்த்தி செய்தனர். தற்காலிக ஒதுக்கீடு 13 ந் தேதி வெளியிடப்பட்டது. 13,14 ந் தேதிகளில் மாணவர்கள் தங்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிச் செய்தோ அல்லது வேறுக்கல்லூரியில் சேர்வதற்கான விருப்பத்தையோ பதிவு செய்துள்ளனர்.
முதல் சுற்றுக் கலந்தாய்வில் பொதுப்பிரிவில் 14 ஆயிரத்து 546 பேரில் 12,294 பேர் விரும்பும் கல்லூரியை பதிவு செய்தனர். அவர்களில் 11,595 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. 11,626 மாணவர்கள் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிச் செய்தனர். 5233 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கும், 4269 மாணவர்கள் தற்காலிக ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், மேலே விரும்பிய இடத்தில் சேரவும், காலியிடம் கிடைத்தால் அளிக்கவும் என கூறியுள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 278 பேர் விரும்பும் கல்லூரியை பதிவு செய்து, 185 பேர் கல்லூரிக்கான ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்தனர். 67 மாணவர்கள் கிடைத்த இடத்தில் சேரவும், மேலே விரும்பிய இடம் கிடைத்தால் சேர விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.
அதேபாேல், தொழிற்கல்விப்பிரிவில் இடங்களை தேர்வு செய்தவர்கள் 22 ந் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். பொறியியல் படிப்பில் முதல்முறையாக கல்லூரிகளில் ஏற்படும் காலியிடங்களை தவிர்ப்பதற்காக புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடைபெறும்போதே, மாணவர்கள் விரும்பும் கல்லூரியில் இடம் கிடைத்தால் சேரலாம். தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரியில் சேர விரும்புகிறேன் அல்லது மேலே விரும்பிய கல்லூரியில் சேர்வதற்கு இடம் கிடைத்தாலும் சேர்வதற்கு காத்திருக்கிறேன் என தெரிவிக்கலாம். ஒதுக்கீடு பெற்றப் பின்னர் காத்திருக்கும் போது, பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
அந்த கட்டண விபரங்கள் வருமாறு-
அண்ணாப் பல்கலைக் கழக வளாக கல்லூரிகள், உறுப்புக்கல்லூரிகள்- 12, 000;
அண்ணாப் பல்கலைக் கழக வளாக கல்லூரியில்(சுயநிதிப்பாடப்பிரிவு) - 20, 000;
அரசுப் பொறியியல் கல்லூரி - 2000;
அரசு உதவிப்பெறும் பொறியியல் கல்லூரி- 4000;
அரசு உதவிப்பெறும், சுயநிதி பொறியியல் கல்லூரியில் (சுயநிதிப்பாடப்பிரிவு) - 25000;
அரசு உதவிப்பெறும் , சுயநிதி பொறியியல் கல்லூரியில் (அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவு ) - 27500;
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் -20000
இதையும் வாசிக்க: நீட் முறைகேடு வழக்கு: தேர்வரின் விடைத்தாள் கார்பன் நகலை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஏற்கனவே, விரும்பிய இடத்தை தேர்வு செய்து , மேலே பதிவு செய்த கல்லூரியில் இடம் கிடைத்தால் பெறுவதற்கான ஒதுக்கீடு 25 ந் தேதி (PROVISIONAL ALLOTMENT FOR UPWARD OPTED CANDIDATES)செய்யப்படும்.
அதனைத் தொடர்ந்து 2ம் சுற்றுக் கலந்தாய்வு செப்டம்பர் 25 ந் தேதி முதல் அக்டோபர் 13 ந் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.