நடப்பு கல்வியாண்டில் 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மாணவர் சேர்க்கை பணிகள் கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 40,000க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு, பரிட்சார்த்த முறையில் (3 ஆண்டுகளுக்கு) ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் U.K.G வகுப்புகள் துவங்கப்பட்டது.
இந்த அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி இயக்க நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரிந்த இடைநிலை ஆசிரியர்கள் மாற்றுப் பணி மற்றும் பணி மாறுதல் மூலம் ஆணைகள் வழங்கப்பட்டு LK.G மற்றும் U.K.G ஆகிய இரண்டு வகுப்புகளையும் ஒரு சேர ஒரே ஆசிரியர் கையாளும் வகையில் பணியமர்த்தப்பட்டனர்.
இதையும் வாசிக்க: எல்கேஜி விவகாரம்.. கடைசி நேரத்தில் தலையிட்டு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர்
இந்நிலையில், அனுபவம் வாய்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மழலையர் வகுப்புகளில் பயிலும் குழந்தைகளை கையாள்வதில் சிக்கல்களும் புரிதல் இன்மையும் நீடிப்பதாகவும், தொடக்க வகுப்புகளில் 4000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்ப முடியவில்லை என்றும் கூறி அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் U.K.G வகுப்புகளை நிறுத்துவதாக தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.
அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளை அங்கன்வாடி பணியாளர்களே கையாளர்கள் (ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ்) என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெளிவுபடுத்தியது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள், எதிர்க் கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் என அனைத்து தரப்பினரும் அரசுக்கு தீவிர அழுத்தம் கொடுத்து வந்தன. இதனையடுத்து, தமிழக அரசு தனது முந்தைய அறிவிப்பை திரும்ப பெறுவதாக அறிவித்தது.
மேலும், LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் கற்றல்- கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள
ஒரு மையத்திற்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் 2381 சிறப்பு ஆசிரியர்கள் நிரப்படுவார்கள் என்று தெரிவித்தது.
இந்நிலையில், தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை, சிறப்பாசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்கு அரசின் ஆணை பெறப்பட்டு செயல்படுத்தப்படும் வரை தொடர்புடைய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி, மாணவர் சேர்க்கை பணிகள் மற்றும் கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய சில பணிகளையும் பட்டியலிட்டுள்ளது. அதில்,2022-23ஆம் கல்வி ஆண்டிற்கான LK.G மற்றும் UK.G வகுப்பு மாணவர் சேர்க்கை ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே தலைமை ஆசிரியர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
தொடர்புடைய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தற்போது அங்கன்வாடியில் பணிபுரியும்
அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் ஆகியோரின் உதவியுடன் சேர்க்கை பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
3 வயதுடைய குழந்தைகள் அனைவரையும் LKG-யிலும், 4 வயதுடைய குழந்தைகள் அனைவரையும் UKG-யிலும் சேர்த்திட ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. பிற குழந்தைகள் அங்கன்வாடி மையக் குழத்தைகளாக அந்தப் பணியாளர்களால் பராமரிக்கப்பட வேண்டும்.
இதையும் வாசிக்க: தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டாம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 2,081 அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகளில் புதிதாக சேர்க்கையாகும் மாணவர் விவரங்களை கல்வியியல் மேலாண்லை தகவல் முறைமை இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், இந்த மாணவர்களுக்கு
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் இயக்ககத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள வளங்களை பயன்படுத்தி தற்போது கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது அங்கன்வாடியில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் ஆகியோருடன் ஒருங்கிணைந்து கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வர வேண்டும்.
இதையும் வாசிக்க: 3552 காலி இடங்களுக்கான காவலர்கள்/சிறைக் காவலர்கள் ஆள் சேர்ப்பு - ஜூலை 7 முதல் விண்ணப்பிக்கலாம்
அங்கன்வாடி மையம் செயல்படும் பணி நேரம் வரையில் LkG, UKG வகுப்புகளில் சேர்க்கையான மாணவர்கள் கல்வி பயில்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்.
பெற்றோர்கள் எளிதில் அணுகும் வகையிலும் அவர்களின் ஐயங்களுக்கு உடனடியாக விளக்கம் அளித்திடும் வகையிலும் தலைமை ஆசிரியர்கள் செயல்படுதல் வேண்டும்.
பல்வேறு முக்கிய அலுவலர்கள் / அலுவலகங்களின் தொடர்பு எண்களை பெற்றோர்களின் பார்வைக்கு தெரியும் வகையில் பள்ளி வளர்கத்திற்குள் தலைமை ஆசிரியர்கள் வைத்திருக்க வேண்டும்.
ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 2381 அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகளில் சேர்க்கையாகி கல்வி கற்கும் மாணவர்களின்
பாதுகாப்பு முழுமையும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை சாரும்.
பள்ளிகளில் ஏற்கனவே கூடுதல் வகுப்பறைகள் இருப்பின் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கூடுதல் வகுப்பறை இல்லாத பள்ளிகள் தற்காலிகமாக அங்கன்வாடி மையங்களையே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கூடுதல் வகுப்பறை தேவை, கழிப்பறை வசதி தேவை போன்றவற்றை தொகுத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலமாக தொகுத்து அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த குழந்தைகளுக்கு தற்போது அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் சத்துணவு அளிக்கப்படல் வேண்டும்.
அங்கன்வாடி மையங்களில் பணியாளர் பற்றாக்குறை இருப்பின் மாவட்ட ஆட்சியரை அணுகி தேவைப்படும் பணியாளரை உடன் மாற்றுப் பணியில் நியமித்திட வேண்டும்.
இவையனைத்தையும் தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து செயல்படுதல் அவசியம்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.