ExaExam10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், மறுகூட்டல், விடைத்தாள் நகல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் கடந்தாண்டுகளில் ஏற்கனவே முதலாம் ஆண்டு தேர்வெழுதி தோல்வியுற்ற (+1 Arrear) பாடங்களை தற்போது மே 2022-ல் எழுதியுள்ள மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Certificate) (10ம் வகுப்பு) / மதிப்பெண் பட்டியல் (Statement of Marks) (12ம் வகுப்பு , 11ம் வகுப்பு ஆரியர்) ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான நாட்கள். விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான நாட்கள் குறித்த தகவல்களை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் / மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்:
24.06.2022 முற்பகல் 11.00 மணி முதல் 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் வழியாகவும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் / மதிப்பெண் பட்டியலைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், 24.06.2022 முற்பகல் 11.00 மணி முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் / மதிப்பெண் பட்டியலை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
10ம் வகுப்பு தேர்வர்கள் - மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
மே 2022 10ம் வகுப்பு தேர்வெழுதி விடைத்தாள்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 22.06.2022 (புதன் கிழமை) காலை 10.00 மணி முதல் 29.06.2022 (புதன் கிழமை) மாலை 5.00 மணி வரை தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
மறுகூட்டல் கட்டணம்: ஒவ்வொரு பாடத்திற்கும் - ரூ.205/-
மறுகூட்டலுக்கான கட்டணம் செலுத்தும் முறை:
மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்.
12ம் வகுப்பு தேர்வர்கள் - விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:
விடைத்தாள் நகல் / மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் 22.06.2022 (புதன் கிழமை) காலை 10.00 மணி முதல் 29.06.2022 (புதன் கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் எதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும். தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.
மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் பாடத்திற்கு விடைத் தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்திட இயலாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும். www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.