12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாட்டில் மட்டும் 3,081 தேர்வு மையங்களில் 3,91,343 மாணவர்கள், 4,31,341 மாணவிகள் என மொத்தம் 8,22,684 பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும், மாணவர்கள் காலை 9.45 மணிக்குள் தேர்வறையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்வு மையங்களில் காலை 9.45 மணிக்கு முதல் மணி அடிக்கப்படும். அந்த நேரத்தில் தேர்வர்கள் தேர்வறைக்கு வர வேண்டும். அதைத்தொடர்ந்து 9.55 மணிக்கு 2ஆவது மணி 2 முறை அடிக்கப்படும். அப்போது அறை கண்காணிப்பாளர் வினாத்தாள் உறைகளைப் பிரிக்கவேண்டும்.
காலை 10 மணிக்கு 3ஆவது மணி 3 முறை அடிக்கப்படும். அந்த நேரத்தில் தேர்வர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும். வினாத்தாளை மாணவர்கள் காலை 10 மணியில் இருந்து 10.10 மணி வரை படித்து பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, காலை 10.10 மணிக்கு 4ஆவது மணி 4 முறை அடிக்கப்படும்போது, மாணவர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும். தொடர்ந்து 10.15 மணிக்கு 5ஆவது மணி 5 முறை அடிக்கப்படும். அந்த நேரத்தில் தேர்வு எழுத தொடங்கலாம்.
இந்நிலையில், பிற்பகல் 1.10 மணிக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்படும். அப்போது விடைத்தாள்களை நூல் கொண்டு கட்டவேண்டும். பிற்பகல் 1.15 மணிக்கு தேர்வு நிறைவு பெற்றதற்கான நீண்ட மணி அடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Must Read : பட்டின பிரவேசம் நிகழ்ச்சியில் தமிழக அரசு தலையிடுவது இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரானது.. குஷ்பு
தேர்வு அறையில் மாணவர்கள் தடையின்றி தேர்வை எழுதுவதற்கு ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் தேர்வை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது. அடுத்ததாக வருகிற 9ஆம் தேதி திங்கட்கிழமை ஆங்கில தேர்வு நடைபெற உள்ளது. அடுத்து வரும் நாட்களில், மற்ற பாடங்களுக்கு தேர்வுகள் நடக்கின்றன.
இந்நிலையில், நாளை 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.