சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் போதிய ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர் இல்லாமல் இருப்பதோடு, பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியை பெறாமல் தொலைதூர கல்வி திட்டம் மற்றும் ஆன்லைன் வழிக் கல்வித் திட்டங்கள் நடத்தி வருகிறது என்றும் , அந்த படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என்றும், பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக் கொண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுடன் ஏற்கனவே பெற்ற அனுமதி முடிவடைந்து விட்டதால், அதன் பிறகு பெற்ற பட்டங்கள் செல்லாது என்பதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் , சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வித் திட்டம் மற்றும் ஆன்லைன் வழியிலான கல்வித் திட்டங்களுக்கு 2020ஆம் ஆண்டு வரை அனுமதி வழங்கப்பட்டது என்றும், ஆனால் அதன்பிறகு பல்கலைக்கழக மானியக் குழுவின் எவ்வித அனுமதியும் பெறாமல் இந்த கல்வித் திட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்திருக்கிறது என்றும், இது முற்றிலும் விதிமீறல்கள் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த கல்வி ஆண்டு அனுமதி கேட்டு விண்ணப்பித்த பல்கலைக்கழக விண்ணப்பம் பரிசீலிக்கப்படாது எனவும், அடுத்த இரண்டு கல்வி ஆண்டுகளுக்கு இந்த கல்வித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
தொலைதூர கல்வி திட்டம் மற்றும் ஆன்-லைன் வழிக் கல்வித் திட்டங்களில் மாணவர்கள் சேர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ள பல்கலைக்கழக மானியக் குழு , இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரும், உயர்கல்வித்துறை செயலாளரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
இதை படிக்க: 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
பல்கலைக்கழகத்தில்இயக்குனர் மற்றும் போதுமான பேராசிரியர்கள் இல்லை என்றும் அந்த அறிக்கையில் பல்கலைக்கழக மானியக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொலைதூர கல்வி திட்டம் மற்றும் ஆன்-லைன் வழிக் கல்வித் திட்டங்கள் மூலமாக பெற்ற பட்டங்கள் செல்லாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.