தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இத்தேர்வின் முடிவுகள் அடிப்படையில் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் எதிர்காலங்களை திட்டமிட இருக்கின்றன.
எனவே, உயர்கல்விக்கும், இந்திய பொருளாதாரத்தின் தேவைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி பற்றிய பெரும் விவாதத்தை மாணவர்கள் முன் வைப்பது அவசியமானதாகிறது.
பிரச்சனைகள்:
படித்தவர்களுக்கான வேலையின்மை என்ற சிக்கலான பிரச்சனையை இந்தியா போன்ற வளரும் நாடுகள் சந்தித்து வருகின்றன. உதாரணமாக, கடந்த 2019ம் ஆண்டு இந்திய ரயில்வே வாரியம் அறிவித்த 63,000 காலி இடங்களுக்கு (நிலை - 1 பதவி) நாடு முழுவதும் 200 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான, கல்வித் தகுதி குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பி.டெக் பட்டம் முடித்த 419,137 பேரும் , முதுநிலை பட்டம் பெற்ற 40,751 பேரும் இதற்கு விண்ணப்பதித்திருந்தனர்.
எந்த வேலையிலும் அமர்த்தப் பட முடியாத, அதே சமயம் கல்வித் தேர்ச்சியுடைய இளைஞர்களை உயர்கல்வி நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன. உதாரணமாக, இந்தியாவின் மொத்த மக்கள்தொகையான 130 கோடி பேரில், 90 கோடி பேர் சட்டப்படி பணி செய்யக்கூடிய பிரிவினராக (Legal Working age Population) உள்ளனர். இந்த 90 கோடி பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புகளைத் தேடுவதில் ஆர்வமில்லாதவர்களாக உள்ளனர் என்று Centre for Monitoring Indian Economy Pvt என்ற தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வேலைநாடுநர்களுக்கு அறிவுரை வழங்கும் தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவகத்தில் மட்டும், 76,19,754 பேர் அரசு பணிக்காக பதிவு செய்து வருகின்றனர். இதில், ஏதேனும் இளம்நிலை பட்டம் பெற்ற இளைஞர்களின் எண்ணிக்கை 23,60,956 ஆக உள்ளது. முதுநிலை பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 11,94,455 ஆக உள்ளது.
உயர்கல்விக்கும், இந்திய பொருளாதாரத்தின் தேவைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை மேலே உள்ள தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. சுதந்திர இந்தியாவில், உயர்கல்விக்கான அணுகல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், தொழித்துறையினருக்கு உதவக் கூடிய மனிதவளத்தை நமது கல்விமுறை தயார் செய்கிறதா? என்பது தான் கேள்விக் குறியாக உள்ளது.
இந்திய பொருளாதாரம் உயர்கல்வியை ஏற்றுக் கொள்கிறதா?
90களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மேற்கத்திய நாடுகளின் நடைமுறையை இந்தியா போன்ற வளரும் நாடுகள் பின்பற்றத் தொடங்கின. இதன் காரணமாக, தொழில்திறன் சார்ந்த ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. நாட்டின் அனைத்து பொருளாதார செயற்பாடுகளிலும் உயர்கல்விக்கான தேவைகள் அதிகரிக்கத் தொடங்கின.
துறைகள் | 1999-2000 | 2009-10 |
மிக அதிகமான பட்டதாரிகள் கொண்ட துறைகள் (விஞ்ஞானம், ஐடி துறை, உயர்கல்வி ஆசிரியர்கள் ) | 1.4% | 2.7% |
அதிகமான பட்டதாரிகள் கொண்ட துறைகள் (தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், சுகாதார பணியாளர்கள்) | 5.4% | 3.0% |
சாதாரண பட்டதாரிகள் கொண்ட துறைகள் (செவிலியர், கிராம நிர்வாகி, பேருந்து நடத்துனர்) | 3.8% | 13.1% |
மிகக் குறைந்த அளவில் பட்டதாரிகள் கொண்ட துறைகள் (விற்பனையாளர், கடை நிர்வாகி) | 11.3% | 10.6% |
பட்டப்படிப்பு தேவைப்படாத துறைகள் | 78.1% | 70.7% |
தரவுகள்: தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு தரவுகள் அடிப்படையில் ஜீமோல் உன்னி மற்றும் சுதிபா சர்க்கார் இதை கணக்கிட்டுள்ளனர்.
உதாரணமாக, 1999-2000 காலகட்டத்தில், பட்டப்படிப்பில் பதிவு செய்தவர்களின் விகிதம் 13.56% ஆக இருந்த நிலையில், 2009-10 காலகாட்டத்தில் 16.55% ஆக அதிகரித்தன. குறிப்பாக, நிர்வாகம், தொழில்நுட்பம், நிபுணத்துவத் துறைகளில் பட்டதரிகள் பணியமர்த்தப்படுவர்கள் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்து காணப்பட்டது.
1999 - 2010 வரையிலான பத்தாண்டுகளில், விஞ்ஞானம், ஐடி துறை, உயர்கல்வி ஆசிரியர்கள் போன்ற அறிவார்ந்த துறைகளில் பட்டத்தாரிகள் பணியமர்த்தப்படும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது, அறிவார்ந்த துறைகள் உயர்கல்விக்கான தேவைகளை அதிகரித்து தான் வந்திருக்கின்றன.
அதே போன்று, கிராம நிர்வாகி, பேருந்து நடத்துனர்,கலைஞர்கள் போன்ற துறைகளில் பட்டதாரிகள் பணியமர்த்தப்படும் எண்ணிக்கை 10 புள்ளிகள் அதிகரித்துள்ளன. செவிலியர் போன்ற சேவைத் துறைகள் பட்டதாரிகளை ஈர்க்கும் துறையாக மாறி வருகிறது.
21 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களில் 71% பேர், பட்டப்படிப்புகள் தேவைப்படாத துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இது, அதற்கு முந்தைய ஒப்பீட்டுக் காலத்தை (1999-2000) விட 7% குறைவாகும்.
இந்தியப் பொருளாதார நடவடிக்கைகள் உயர்கல்விக்கான தேவைகளை அதிகரித்து வருகிறது. உதாரணமாக, ஆராய்ச்சி போன்ற அறிவார்ந்த துறைகளில் இந்த போக்கு காணப்படுகிறது.
எனவே, இந்தியாவில் கல்விக்கான வாய்ப்புகள் இருந்து வருகின்றன. பொருளாதார அபிவிருத்திக்கு தேவையான பொருத்தமான தொழிற்பயிற்சிகளை வழங்குவது உயர்கல்வி நிறுவனங்களின் கடமையாகும். அத்தகைய வாய்ப்புகளை உருவாக்கும் கல்வி நிறுவனங்களையே மாணவர்கள் தேர்ந்தெடுக்க முன்வர வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.