அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை பெறப்படவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 6 முதல் 14 வயதிலான குழந்தைகளின் கல்வியை அடிப்படை உரிமையாக மாற்றும் விதமாக 2009ஆம் ஆண்டு மத்திய அரசு அனைவருக்கும் கல்வி உரிமை என்ற சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளும் தங்களின் 25 சதவீத இடங்களை குழந்தைகளின் இலவச கல்விக்காக ஒதுக்க வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கு வருகின்ற 20ம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை இணையதளம்
www.rte.tn schools gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'சிறுபான்மையினருக்கு சொந்தமில்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில் இந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஏப்ரல் 20 ஆம் தேதி தொடங்கி மே 18ஆம் தேதி வரை பெறப்படுகிறது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றால் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பலகையிலும் முறையாக பதிவிட வேண்டும்.
மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களை இணையதளத்தில் பதவிவேற்றம் செய்ய வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பின் மே 23ஆம் தேதியன்று குலுக்கல் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு தேர்வு செய்யப்படும் குழந்தைகளின் பெயர் பட்டியல் மே 24ஆம் தேதியன்று வெளியிடப்பட வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை மே 29ஆம் தேதிக்குள் பள்ளிகளில் சேர்த்திருக்க வேண்டும்' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.