கல்விக் கட்டணம் தொடர்பாக தேசிய கட்டணக் குழு (National Fee Committee) அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் பொறியியல் மற்றும் தொழிநுட்ப கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டண விதிகளை (Tuition Fee) அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு மாற்றியமைத்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.இ, பி.டெக்., பி.ஆர்க், போன்ற இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டர் காலத்துக்கு குறைந்தபட்ச கட்டணம்
ரூ.79,600 ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய முறையில், குறைந்தபட்ச கட்டணம் ரூ.55,000, அதிகபட்ச கட்டணம் ரூ.1.15 லட்சம் என்றிருந்தது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பதற்கான கட்டணமும் உயர்ந்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு செமஸ்டர் காலத்துக்கு
குறைந்தபட்சமாக 67,900 ரூபாயும், அதிகபட்சமாக 1,40,900 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டர் காலத்துக்கு குறைந்தபட்சமாக 1,41,200 ரூபாயும், அதிகபட்சமாக 3,04,000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், இந்த கட்டண வரம்புகளுக்கு உட்பட்ட அசல் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
அதேபோன்று, எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலை படிப்புகளுக்கும் கட்டண விதிகள் மாற்றப்பட்டுள்ளது. 3 ஆண்டு எம்சிஏ படிப்புக்கு, ஒரு செமஸ்டர் காலத்துக்கு குறைந்தபட்சமாக 88,500 ரூபாயும், அதிகபட்சமாக 1,94,100 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டு எம்பிஏ படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000, அதிகபட்சமாக ரூ.1,95,200 என்று கட்டணம் நிர்ணயக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர்களுக்கு சம்பள வரம்பு அதிகரிப்பு:
பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு 7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைப்படி சம்பளம் வழங்க வேண்டும் என்று அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது. அதன்படி, உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம் ரூ.1,37,189, பேராசிரியர்களுக்கு ரூ.2,60,379 என்று ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிபுணர் குழு:
முன்னதாக, ஏஐசிடிஇ கடந்த 2015ம் ஆண்டு உயர்கல்வி நிறுவனங்களில் கற்பித்தலுக்கான மற்றும் பிற கட்டணங்களை வசூலிப்பதற்கான அளவீடுகளை நிர்ணயிப்பதற்கும், தொழிநுட்ப கல்வி வணிக மயமாக்கப்படுவதை தவிர்ப்பதற்கு தேவையான அடைத்து நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் முன்னாள் நீதிபதி பி என் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.
இந்த குழு, தனது பரிந்துரை அறிக்கையில் கல்விக் கட்டணங்கள் தொடர்பான சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது. உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர்களின் ஊதியம் போன்ற ஆண்டுதோறும் செய்ய வேண்டிய செலவினங்கள் அடிப்படையில் தான் அடிப்படை கல்விக் கட்டணம் இருக்க வேண்டும். நிர்வாகத்தின் சொத்து குறைபாடு, இழப்பு போன்ற பிற அபாயங்களை கணக்கில் கொள்ளக் கூடாது. இதனடிப்படையில், பொறியியல் இளநிலை படிப்புகளில் அதிகபட்ச கல்விக் கட்டணமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1.44 லட்சம் முதல் ரூ. 1.58 வரை இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்தது.
ஆனால், தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தனியார் கல்லூரிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தத் தொடங்கினர். பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்குமாறு கல்லூரி நிர்வாகத்தை அழுத்தம் கொடுத்து வந்தன. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் எதிர்மறையான அபயாங்களை உருவாக்குவதாகவும், தங்களது அன்றாட நிர்வாக செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்து வந்தது.
இந்நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முன்னாள் நீதிபதி பி என் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் குறைந்தபட்ச கல்விக் கட்டணம் மற்றும் மேம்பாட்டு நிதித் திட்டங்களுக்கான தேசிய கட்டணக் குழுவை ஏஐசிடிஇ அமைத்தது. அந்த குழு முன்னதாக தனது அறிக்கையை சமர்பித்தது. அதில், பொரியியல் படிப்புகளுக்கான குறைந்தபட்ச கல்வி கட்டணம் ரூ. 79,000 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ. 1.89 லட்சம் ஆக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.