முகப்பு /செய்தி /தர்மபுரி / ஒகேனக்கலில் நீர் வரத்து குறைவு.. வறண்டு காணப்படும் அருவிகள்.. ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலாப் பயணிகள்!

ஒகேனக்கலில் நீர் வரத்து குறைவு.. வறண்டு காணப்படும் அருவிகள்.. ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலாப் பயணிகள்!

ஒகேனக்கல்

ஒகேனக்கல்

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Dharmapuri, India

தண்ணீர் வரத்து குறைவால் ஒகேனக்கல்லில் வெறும் பாறைகளாக காட்சியளிக்கிறது. ஐந்தருவிகளும் வறண்டது காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர்.

கர்நாடக மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்குள் நுழைகிறது. பருவமழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்போது அதிகபட்சமாக 2 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் ஒகேனக்கல்லுக்கு வந்து சேரும். அப்போது காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும்.

இங்குள்ள மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதை காண தமிழ்நாடு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இவர்கள் தொங்கு பாலம், நடைபாதை, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசிப்பார்கள். மேலும் குடும்பத்தினர், நண்பர்களுடன் பரிசலில் சென்று மகிழ்ந்து செல்வார்கள். கடந்த சில மாதங்களாக ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

தண்ணீர் வரத்து குறைந்ததாலும் பருவமழை பொய்த்து போனதாலும் தற்போது ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 500 கனஅடிக்கு குறைவாகவே தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் கரைபுரண்டு ஓடிய காவிரி ஆறு வெறும் பாறைகளாக காட்சி அளிக்கிறது. ஆர்ப்பரித்து கொட்டிய ஐந்தருவிகள் களையிழந்து வறண்டு காணப்படுகிறது. காவிரி ஆற்றில் சிறு நீரோடை போல் தண்ணீர் செல்கிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

கோடை விடுமுறை அறிவிக்கப்படும் முன்பே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் இன்றி வறண்டு குட்டை போல் காட்சி அளிப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது ஒகேனக்கல் கூட்டு குடிநீர்திட்டம் செயல்படுகிறது. தற்பொழுது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்து வருவதால் இரு மாவட்ட மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும்.

First published:

Tags: Cauvery River, Tourism