பள்ளியில் மாணவர்கள் விளையாட்டாக மோதல்: இருகிராமங்களுக்கிடையே வெடித்தது கலவரம்
பள்ளியில் மாணவர்கள் விளையாட்டாக மோதல்: இருகிராமங்களுக்கிடையே வெடித்தது கலவரம்
கடலூர்: இருகிராமங்களுக்கிடையே வெடித்தது கலவரம்
Cuddalore District : கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்குள் மாணவர்கள் விளையாட்டாக மோதிக்கொண்ட நிலையில் அது இரண்டு ஊர்களுக்கிடையேயான கலவரமாக மாறியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலங்காடு மற்றும் கயப்பாக்கம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளியில் விளையாட்டு வகுப்பின் போது மாணவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது இரு கிராம மாணவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் வாய் தகராறு முற்றி மாணவர்கள் இரு பிரிவினராக பிரிந்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். அதன் பிறகு இந்த தகவல் அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி விட்டனர். ஆனால் இந்த தகவல் வேலங்காடு மற்றும் கயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு தெரிய வருகிறது.
இதனை அடுத்து வேலங்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் பட்டியல் இன மக்கள் வசிக்கும் கயப்பாக்கம் கிராமத்திற்கு தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று மோதலில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் தடி உருட்டு கட்டை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.
இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்டதில் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த கயப்பாக்கம் கிராமத்தில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் சாய்க்கப்பட்டது. பின்னர் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இரண்டு கிராம மோதலில் மாணவ மாணவியர்களும் ஈடுப்பட்டனர்
மேலும் இரண்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது இரு குழுவாக இவர்கள் தாக்கிக் கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் மாணவ மாணவிகள் பெரியவர்கள் என அனைவரும் இந்த தாக்குதலில் இறங்கி ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வது தெரியவந்தது.
கிராம மோதலில் கட்டைகளையும் குச்சிகளையும் எடுத்து செல்லும் மாணவர்கள்
இதனை தொடர்ந்து போலீசார் இந்த வீடியோவை வைத்து தற்பொழுது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து அவர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இரண்டு கிராமங்களிலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ஏராளமான போலீசார் இந்த கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டப்பட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.