திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபத் திருவிழாவையொட்டி வரும் 29-ஆம் தேதி மகா தீபத்தன்று கிரிவலம் செல்லவும் பக்தர்கள் கோவிலுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவிழா நடக்கும் 9 நாட்கள் ஒரு நாளுக்கு 5000 பக்தர்கள் என ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவுக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவான வருகின்ற 29-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் மகா தீபத் திருவிழாவில் கடந்த ஆண்டு 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் கொரோனா பெரும் தொற்று காரணமாக பக்தர்கள் யாருமின்றி திருவிழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
26-ஆம் தேதி நடைபெற இருந்த மகா ரதம் என்று அழைக்கக்கூடிய பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மகா தீபத் திருவிழாவையொட்டி பத்து நாட்கள் திருவிழா கோயில் வளாகத்திலேயே நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.