கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், நிலைமையின் விபரீதத்தை உணராமல் ஆம்புலன்சில் நோயாளிகள் போல் பயணம் செய்த பொது மக்கள் மீது வழக்குப் பதிவு செய்து வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டு ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பொதுமக்கள் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒரு சில ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் ஹைதராபாத்திலிருந்து விஜயவாடாவுக்கு சாதாரண பொது மக்களை, நோயாளிகள் போல் அதிக பணம் வாங்கிக்கொண்டு அனுப்பி வைப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் இரண்டு மாநில எல்லையிலுள்ள கொட்டாடாவில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஆம்புலன்ஸ் ஒன்றில் பொதுமக்கள் சிலர் நோயாளிகள் போல் ஹைதராபாத்திலிருந்து விஜயவாடாவுக்கு பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆம்புலன்சில் நோயாளிகள் போல் பயணித்தவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். அதேபோல் ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுனர் ஆகியோர் மீதும் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவி பொதுமக்களை நோயாளிகள் போல் அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.