ஐரோப்பிய நாடான பிரான்ஸில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. நாள்தோறும் புதிதாக 35,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 42 லட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், மூன்றாவது அலை ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளதாக பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தலைநகர் பாரிஸ் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகள் என 16 நகரங்களில் ஒரு மாத காலத்துக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை கடைகள் மற்றும் புத்தக விற்பனையகங்கள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
உரிய காரணம் இல்லாமல் பிராந்தியங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள தடைவிதிக்கப்படுகிறது. உரிய சான்றிதழ்களைப் பெற்றபிறகு, பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், தங்களது வீடுகளிலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவு வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.
மேலும் படிக்க...
கொரோனா 2வது அலையை தடுத்து நிறுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்
உறவினர் வீடுகளுக்கோ, விருந்து நிகழ்ச்சிகளுக்கோ செல்ல வேண்டாம் என்று பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். அதேநேரம், தேசிய அளவிலான இரவு நேர ஊரடங்கு மாலை 6 மணிக்குப் பதிலாக இரவு 7 மணிக்கே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் தொடர்ந்து செயல்படும். விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
அஸ்ட்ராஜெனீகா தடுப்பு மருந்தை போடும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் போட்டுக் கொள்ளலாம் என பிரதமர் கேஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.