CENTRAL GOVERNMENT BANS SUPPLY OF OXYGEN TO NON ESSENTIAL INDUSTRIES TO PREVENT OXYGEN SHORTAGE FOR MEDICAL USE VAI
அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜனை விநியோகம் செய்ய மத்திய அரசு தடை.. மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தடுக்க நடவடிக்கை..
பியூஷ் கோயல்
அதிகரித்து வரும் மருத்துவ ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு, வரும் 22ம் தேதி முதல் குறிப்பிட்ட 9 தொழிற்சாலைகள் தவிர்த்து மற்ற தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்தவும், அதனை மருத்துவமனைகளுக்கு மாற்றவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 12 மாநிலங்களின் பிரதிநிதிகளுடன், ஆக்சிஜன் விநியோகம் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 6177 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மாநில அரசுகளுக்கு விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, மகாராஷ்டிராவுக்கு 1500 மெட்ரிக் டன், டெல்லிக்கு 350, உத்தரப்பிரதேசத்துக்கு 800 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட உள்ளது.
கொரோனாவுக்கு முன் 1000 முதல் 2000 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் தேவை இருந்ததாக கூறியுள்ள பியூஷ் கோயல், கடந்த 15ம் தேதி நிலவரப்படி, ஆக்சிஜனுக்கான தேவை 4,795 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது என்றார். இதையடுத்து, 9 வகை தொழிற்சாலைகளைத் தவிற மற்ற அனைத்து தொழிற்சாலை பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் விநியோகத்தை வரும் 22ம் தேதி முதல் மருத்துவமனைக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
ஆக்சிஜன் விநியோகத்தை விரைவுபடுத்தும் வகையில், ரயில் பசுமை வழித்தடம் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், ரயில்களில் டேங்கர் மூலம் ஆக்சிஜன் எடுத்துச் செல்ல உள்ளதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள பியூஷ் கோயல், மருத்துவ ஆக்சிஜன் தேவையை சமாளிக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளார்.