மதுரையில் கொரோனா வார்டில் சிகிச்சை அளித்து தொற்று பாதிப்பு ஏற்பட்ட மருத்துவர்களின் வீடுகளுக்கு குடும்பத்தாரை உள்ளே வைத்து தகரஷீட்டுகளை வைத்த மாநகராட்சிக்கு எதிராக அரசு மருத்துவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் பணியாற்றும் மூன்று மருத்துவர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மருத்துவர்களின் வீடுகளுக்குச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள், அவரது குடும்பத்தார் வீட்டை விட்டு வெளியே வராத அளவிற்கு வீட்டின் வெளியே தகரஷீட்டுகளை வைத்து அடைத்து சீல் வைத்தனர்.
மேலும் படிக்க: 300 தன்னார்வலர்கள்... தமிழகத்தில் கோவிஷீல்ட் சோதனைக்கான பணிகள் தொடங்கியது..
மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு இந்திய மருத்துவக் கழக மதுரை கிளையின் மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டு அதனால் தொற்று ஏற்படும் மருத்துவர்களின் குடும்பத்தை உள்ளே வைத்து வெளியே வரமுடியாத அளவிற்கு வெளியில் தகரத்தால் அடைத்து சீல்வைப்பது மனித உரிமை மீறல் என கண்டனம் தெரிவித்துள்ள இந்திய மருத்துவ கழக மதுரை கிளையின் தலைவர் அழகவெங்கடேசன், தொற்று ஏற்பட்டால் தங்கள் குடும்பத்தினர் தவிக்கும் சூழல் ஏற்படுமோ என கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் கலக்கம் அடைந்துள்ளதாகவும், முதியோர், குழந்தைகள் என மருத்துவர்களின் குடும்பத்தினர் அடைபட்ட வீட்டுக்குள் தவித்து வருவதாகவும், இதுகுறித்து மதுரை மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் மாற்று ஏற்பாடு செய்யாமல் வீட்டை அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது என நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்தியேகமாக தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை மனித உரிமை மீறல் என போர்க்கொடி தூக்கி உள்ள அரசு மருத்துவர்கள், இந்தப் பிரச்சனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் தயாராகி வருகின்றனர். மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவர்கள் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு கொரோனா சிகிச்சைக்கு வந்துள்ள நோயாளிகளை பாதிக்கும் முன் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.