கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் திருமண மண்டப மைதானத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகியவர்கள் திமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, அதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், தமிழக முன்னேற்ற கழகம் உட்பட பல்வேறு கட்சிகளில் இருந்து வந்த 4,000-க்கும் மேற்பட்டோர் முதமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இதையடுத்து, மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு கட்சி வேட்டி, துண்டு போன்றவற்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கி கட்சியில் இணைந்து கொண்டார். விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், “நமது இலக்கு வரும் நாடாளுமன்ற தேர்தல். 40 தொகுதிகளையும் வெற்றி பெற வேண்டும். இதேபோல் இந்த மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும்”என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சில மாதங்களுக்கு முன்னால் கோவை செல்வராஜ் திமுகவில் தன்னை இணைத்து கொண்டார். மாற்று கட்சியை சார்ந்தவர்கள் தாய் கழகத்தில் இணைய காத்துக்கொண்டு இருப்பதாக செல்வராஜ், செந்தில் பாலாஜி ஆகியோர் தேதி கேட்டனர். ஈரோடு கிழக்கு இடைதேர்தல் வந்து விட்டதால் அவர்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றாமல், இன்று அதற்கான ஏற்பாடு இப்போது செய்யப்பட்டு இருக்கிறது.
செல்வராஜ் ஏற்கனவே இயக்கத்தில் இணைந்து இருந்தாலும், ஏறக்குறைய 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாற்று கட்சியில் இருந்து திமுகவில் இணைத்து இருப்பதற்கு வரவேற்பு தெரிவிக்கின்றேன். கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்தபோது, விவாத நிகழ்வுகளில் பங்கேற்பதை பார்த்து இருக்கின்றேன். அதிமுகவை சேர்ந்த பேச்சாளர்கள் சிலர் பேசும்போது ஆத்திரம், கோவம் வரும். ஆனால் கோவை செல்வராஜ் பேசும்போது அப்படி இருக்காது.
சில நேரங்களில் அவர் என்னை திட்டி பேசி இருக்கிறார். இப்போது அவர் தாய் கழகத்திற்கு தேடி வந்திருக்கிறார். நம்மை திட்ட திட்ட தான் வைரமாக ஜொலிக்கிறோம். அதுதான் உண்மை. செல்வராஜ் மட்டுமல்ல அவருடன் வந்து இருப்பவர்களை தாயுள்ளத்துடன் வரவேற்கிறேன். திமுக தாய் கழகம் என்று சொல்கிறோம். இதற்கு வரலாறு இருக்கிறது. ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என அண்ணா இந்த கட்சியை துவங்கவில்லை.
ராபின்சன் பூங்காவில் கட்சி துவங்கியபோது ஆட்சியை பிடிக்க அல்ல. ஏழை, எளிய மக்களுக்கு, விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, அடிதட்டில் வாழும் மக்களுக்கு, தமிழ சமுதாயத்திற்காக இந்த கட்சி துவங்கப்படுகிறது என சொன்னார். நாட்டில் வரலாற்றி்ல இடம் பெற்று இருக்க கூடிய கட்சிகள் உண்டு. திடீர் திடீரென தோன்றும் கட்சிகள் உண்டு. கட்சி தோன்றியவுடனே நாங்கதான் அடுத்த முதல்வர். அடுத்த எங்க ஆட்சிதான் என்று சொன்னவர்கள், இப்போது அனாதைகளாக இருக்கின்றனர்.
1949ல் கட்சி துவங்கினாலும், 1957ல் தேர்தல் களத்திற்கு வந்து 67ல் திமுக ஆட்சி அமைத்தோம். அண்ணா ஓர் வருடத்தில் ஆட்சியில் இருந்தபோது பல முக்கிய தீர்மானங்களை கொண்டு வந்தார். அதில் சீர்திருத்த திருமணம், இரு மொழி கொள்கை, தமிழ்நாடு என்ற பெயர் சூட்டல் ஆகியவற்றை முக்கியமாக தீர்மானங்கள் குறிப்பிடத்தக்கது. தமிழன் தன்மானத்தோடு வாழ காரணம் இந்த தீர்மானங்கள்தான்.
தமிழ்நாடு வரலாற்றில் 184 என்ற எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சி பொறுப்பேற்ற கட்சி திமுகவை தவிர வேறு எதுவும் இல்லை. நெருக்கடி காலத்தில் திமுக ஆட்சியில் இருக்கிறது. இந்திரா காந்தியிடம் இருந்து தூதுவந்தது. நெருக்கடியை எதிர்க்க கூடாது என சொன்னார்கள். அதை ஏற்க மறுத்து நெருக்கடி நிலையை ரத்து செய்யவேண்டும். தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கடற்கரையில் மிகப்பெரிய கூட்டம் நடத்தி தீர்மானம் போட்டோம். இதனால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு நாங்கள் கைது செய்யப்பட்டோம்.
திமுகவை போல வெற்றி பெற்ற கட்சியும் கிடையாது. தோல்வி அடைந்த கட்சியும் கிடையாது. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகள் காப்பாற்றப்பட்டுள்ளது. 6வது முறையாக நடைபெறும் திமுக ஆட்சி சொல்வதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் ஆட்சியாக என்னுடைய ஆட்சி இருக்கிறது. ஏற்கனவே நடந்த சட்டமன்ற தேர்தலில் 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றார்,
அவர் மறைவிற்கு பின்னர் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் கூட்டணி சார்பில் நிற்க வைத்த வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். இதற்கு காரணம் இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் நம்பிக்கை தான். இதனால் தான் இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதேபோன்ற வெற்றியை பெற்றெடுக்க வேண்டும். இந்த ஆட்சியின் திட்டங்கள் தொடர, சாதனைகள் மலர, ஆட்சி தொடர நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற இன்றே களமிறங்க வேண்டும். மதம், சாதியை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை கலைத்து விட வேண்டும் என சிலர் செயல்படுகின்றனர்.
கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தை மட்டும் இழந்தோம். இந்த முறை அதுவும் இழக்க கூடாது. பாண்டிச்சேரி உட்பட 40 இடத்தையும் பெற வேண்டும். நாடும் நமதே, நாளையும் நமதே. இந்தியா முழுவதும் வெற்றி பெற நாம் முயற்சியில் ஈடுபட போகிறோம். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்கவேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
செய்தியாளர் : குருசாமி - கோவை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Coimbatore, DMK, Local News