தமிழகத்தில் திருத்தி அமைக்கப்பட்ட மின் கட்டண உயர்வை அமல்படுத்தக் கூடாது: கோவை தொழில் முனைவோர் கோரிக்கை
தமிழகத்தில் திருத்தி அமைக்கப்பட்ட மின் கட்டண உயர்வை அமல்படுத்தக் கூடாது: கோவை தொழில் முனைவோர் கோரிக்கை
மின் கட்டணம்
தமிழகத்தில் திருத்தி அமைக்கப்பட்ட மின் கட்டண உயர்வை அமல்படுத்தக் கூடாது என கோவை தொழில் முனைவோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியிருக்கும் தங்களுக்கு இந்த புதிய கட்டண உயர்வு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர்.
தொழில் நகரான கோவையில் 30,000க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் கூடங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக கடும் நெருக்கடியில் சிக்கி தவித்த சிறு, குறு தொழில்கள் தற்போதுதான் அதில் இருந்து மீள துவங்கியிருக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் திருத்தப்பட்ட மின் கட்டண உயர்வை நேற்றைய தினம் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது. இதில் சிறு, குறு தொழில் முனைவோர் பயன்படுத்தும் தாழ்வழுத்த மின்சாத்திற்கு யூனிட் 1 க்கு 50 பைசா கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சிறு , குறு தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர்.
இந்த கட்டண உயர்வு கடுமையாக சிறு, குறு தொழில்களை முடக்கும் எனவும் ஏற்கனவே மூலப்பொருள் விலை உயர்வில் இருந்து மீள முடியாமல் இருப்பதுடன் குஜராத் மாநிலத்துடன் பம்ப்செட் உற்பத்தியில் போட்டியிட முடியாத நிலையில் இருப்பதாகவும், இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளும் 150 சதவீதத்திற்கும் அதிகமாக வரியினை விதித்துள்ள நிலையில் மின் கட்டண உயர்வும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழ்நாடு குறுந்தொழில் முனைவோர் சங்க தலைவர் ஜேம்ஸ் தெரிவித்தார்.
தற்போது யூனிட் ஒன்றுக்கு 6.50 ரூபாய் கட்டி வரும் நிலையில் , திருத்தப்பட்ட கட்டண உயர்வு, அதற்கான ஜி.எஸ்.டி, எச்.பி இணைப்பு கட்டணம் ஆகியவை சேர்த்து ஒரு யூனிட் 8.50 ரூபாய் வரை உயர்ந்து விடும் எனத் தெரிவித்த அவர், தமிழக அரசு இந்த முயற்சியை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் தொழில் துறையினருக்கு நிச்சயம் பாதகமாக இருக்கும் என தெரிவித்த டான்சியா அமைப்பின் தலைவர் சுருளிவேல் , ஜி.எஸ்.டி, மூலப்பொருள் உயர்வு என எல்லா பக்கமும் அடிவாங்கி வரும் நிலையில் இந்த புதிய திருத்தப்பட்ட கட்டண உயர்வை குறைந்தபட்சம் இரு வருடங்களாவது நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சிறு, குறு தொழில் முனைவோர் மானியம் கேட்கவில்லை, கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என கேட்கின்றோம் என தெரிவித்த அவர், இதே கட்டணத்தை நீடித்தால் போதும் என்றுதான் கேட்கின்றோம் எனவும் அரசு இதற்கு செவி சாய்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதே போல உயர் மின் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழில் கூடங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 40 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. கொரொனா பாதிப்பிற்கு பின் தொழில்கள் மீள துவங்கி இருக்கும் நிலையில் இந்த கட்டண உயர்வு கோவை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள தொழில் முனைவோருக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தவே செய்யும். சிறு, குறு தொழில் முனைவோரின் கோரிக்கைகளை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் செவி சாய்க்குமா என்பது கருத்து கேட்பு கூட்டத்திற்கு பின்பே தெரியவரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.