முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / வீட்டில் வெடித்த ஃபிரிட்ஜ்.. இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட இருவர் உடல் கருகி பலி.. என்ன நடந்தது?

வீட்டில் வெடித்த ஃபிரிட்ஜ்.. இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட இருவர் உடல் கருகி பலி.. என்ன நடந்தது?

பிரிட்ஜ் வெடித்து பலியான எஸ்.ஐ.

பிரிட்ஜ் வெடித்து பலியான எஸ்.ஐ.

Pollachi fire accident | வாடகை வீட்டில் குடியிருக்கும் பெண், வீட்டு ஓனரின் வீட்டில் சமைக்க சென்ற போது பிரிட்ஜ் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pollachi, India

பொள்ளாச்சி அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில்  காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த சபரிநாத் (40) சென்னையில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனியாக வசித்து வந்தார். நல்லூர் கிராமத்தில் உள்ள இவரது வீட்டில் கணவனை இழந்த பெண் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

சென்னையில் பணியாற்றி வரும் சபரிநாத் அவ்வப்போது விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். வீட்டிற்கு  மேல் பகுதியில் உள்ள போர்ஷனில் தங்கி வந்துள்ளார். அந்த வகையில் சபரிநாத் கடந்த 7ஆம் தேதியும் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த அவருக்கு, கீழ் வீட்டில் குடியிருக்கும் சாந்தி  சமையல் செய்து கொடுக்க மேல் பகுதிக்கு சென்றுள்ளார். இருவரும் கதவை பூட்டி விட்டு உள்ளே சமைத்து கொண்டிருந்த வேலையில் திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது.

இதனால் பதறி போன அக்கம்பக்கத்தினர் என்னவென்று பார்த்த போது, வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது. மேலும் சபரிநாத் மற்றும் சாந்தி இருவரும் உடலில் தீ பற்றிய நிலையில் கதறி கொண்டிருந்தனர். ஆனால், கதவு உள் பக்கம் பூட்டப்பட்டிருந்ததால் பொதுமக்களால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. செய்வதறியாது திகைத்த அக்கம்பத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, இருவரும் உடல் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி மின் கசிவு காரணமாக வெடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக நல்லூர் பாலக்காடு சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

செய்தியாளர்: ம.சக்திவேல்..பொள்ளாச்சி.

First published:

Tags: Coimbatore, Crime News, Fire accident, Local News, Pollachi