தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் மக்னா காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தது. பலமுறை விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் மக்களை அச்சுறுத்திய இந்த யானையை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பொள்ளாச்சி கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை சின்ன தம்பி மற்றும் வனத்துறை குழுவினர் உதவியுடன் கடந்த கடந்த 5ஆம் தேதி அன்று மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானையை பிடித்தனர். மக்னா யானை பொள்ளாச்சி அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதியான டாப்சிலிப் வரகளியார் வனப்பகுதியில் 6ஆம் தேதி அன்று விடப்பட்டது.
வனத்துறை அதிகாரிகள் தனி குழு அமைத்து அந்த மக்னா காட்டு யானையை கண்காணித்து வந்த நிலையில் நேற்று இரவு அந்த யானை வனத்தை விட்டு வெளியேறி சேத்துமடை கிராமம் வழியாக நுழைந்து, நல்லூத்துக்குளி, கா.க.புதூர், ஆத்து பொள்ளாச்சி, உள்ளிட கிராமங்களை கடந்து, தற்போது மன்னூர் ராமநாதபுரம் என சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து சென்று கொண்டே இருந்தது. இதனை அடுத்து பொள்ளாச்சி வனச்சரக அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து யானையை பின் தொடர்ந்து சென்று கண்காணித்து வந்த நிலையில் தற்பொழுது சூலக்கல் அருகே உள்ள கோவிந்தன் ஊர் என்ற இடத்தில் ஓய்வெடுத்து கொண்டுள்ளது.
இதையும் படிக்க : "எங்களையே மிரட்டுராங்க" கோவை விமான நிலையத்திற்கு இடம் கொடுத்த மக்கள் குமுறல்!
யானை மீண்டும் அப்பகுதியில் இருந்து பயணித்தால் கிராம மக்கள், விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாப்சிலிப் கோழிக்கமுத்தியில் இருந்து சின்னத்தம்பி மற்றும் ராஜவர்த்தனன் என இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் யானையை வனப்பகுதியில் விரட்டுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
யானை கிராமப்பகுதிகளில் நுழைந்து வீடுகள் மற்றும் விலை நிலங்களை சேதப்படுத்துவதற்குள் அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என்று வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : சக்திவேல் மலையாண்டி (பொள்ளாச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.