நாளுக்கு நாள் வளர்ந்து வரும் விஞ்ஞானம், உலகில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவத்துறையில் பல்வேறு நோய்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு மருந்து மாத்திரைகளைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். ஆயினும் புற்றுநோய் போன்ற ஒரு சில நோய்களுக்கு போதிய மருத்துவம் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் சவாலாகவே விளங்கி வருகிறது.
புற்று நோய்க்கான மருந்துகள் கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தொடர்ந்து இரவு பகல் பாராமல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அலோபதி வைத்தியத்தில் புற்றுநோய்க்கான உரிய மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சைக்கு அதிக கட்டணமும் புற்றுநோய் குணமாக பல வருடங்களும் ஆகிறது. இதன் காரணமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வாழ்க்கையில் வறுமையில் போராடிக்கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களால் புற்று நோய்க்கு உயர் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் நாள்தோறும் தவித்து கண்ணீர் சிந்தி வருவதை காணமுடிகிறது.
குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் குடும்பமே என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். அதுவும் தீராத வியாதி என்றாலோ, அல்லது விரைவில் மரணத்தை அளிக்கக் கூடிய வியாதி என்றாலோ தினம் தினம் ஒட்டுமொத்த குடும்பமும் செத்து செத்துப் பிழைக்கும் . புற்றுநோய்க்கு மருந்துகள் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் புற்றுநோய் உட்பட 14 வகை நோய்களை மூலிகை வைத்தியத்தால் குணப்படுத்த முடியும் என்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரவிச்
சந்திரன் என்பவர் சவால் விட்டு கூறுகிறார்.
இவர் மேட்டுப்பாளையம் பங்களாமேடு வெங்கிடசாமி நாயுடு வீதியில் ஒரு வீட்டில் மூலிகை மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அதனை ஒட்டியுள்ள வனப்பகுதியில் சில அரிய வகை மூலிகை செடிகள் காணப்படுகின்றன. அங்குள்ள மூலிகை செடிகளை கண்டறிந்து அதன்மூலம் மூலிகை சிகிச்சை எடுத்து நோயை குணப்படுத்தலாம் என்று பொதுமக்கள் இங்கு படையெடுக்கின்றனர்.
தன்னைத் தானே மூலிகை வைத்தியர் என்று கூறிக்கொள்ளும் ரவி சந்திரன் சொரியாசிஸ், பக்கவாதம், ஆஸ்துமா, எலும்பு அரிப்பு, சிறுநீரக கோளாறு, ஒற்றை தலைவலி, மூட்டு வலி, இதய அடைப்பு உட்பட 14 வகையான நோய்களுக்கு மூலிகை வைத்தியம் செய்து வருகிறார். இவ்வகை நோய்கள் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்கு வரும்போது அவர்கள் மூன்று நாட்கள் தங்க வைக்கப்பட்டு மூலிகை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்காதல் விவகாரம் கணவனுக்கு தெரிந்ததால் தீக்குளித்து மனைவி தற்கொலை - பல்லாவரத்தில் சோகம்
தங்குமிடம் உணவு ஆகியவை அனைத்தும் இலவசம். மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை பெற ரூபாய் 4,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மூலிகை வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வினோத முறையில் காதுகளில் மூலிகை மருந்து ஊற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூலிகை சிகிச்சையால் நோய் குணமாகிறதா இல்லையா என்பது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தான் வெளிச்சம்.
நோயாளிகள் மூன்று நாட்கள் மட்டுமே தங்கி சிகிச்சைபெற அனுமதிக்கப்படுகிறார்கள். மூன்று நாட்களுக்குப் பின்னர் அவர்கள் சென்றுவிடவேண்டும். அதன் பின்னர் மீண்டும் மூன்று நாட்களுக்கு வேறு நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு மூலிகை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இவர் மூலிகை மருத்துவ சிகிச்சைக்கான பட்டப்படிப்பு ஏதாவது படித்துள்ளாரா அல்லது இதற்கான சான்றுகள் ஏதாவது வைத்துள்ளாரா என்று தெரியவில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில், ஒரு வாரத்தில் எல்லா வியாதியும் குணமாகும் என்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களில் ஏழை எளிய மக்கள் ஈர்க்கப்படுகின்றனர்.
நவீன மருத்துவமுறைகள் வந்த போதும், இன்னும் சில வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்க மருந்தில்லாமல் தவிக்கிறது மருத்துவ உலகம். இன்னும் சில சிகிச்சை முறைகளில் மருத்துவத்திற்கு அதிக செலவாகிறது. மேலும் தங்களது நோய் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையில் குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் இந்த மாதிரி மூலிகை மருத்துவ சிகிச்சையை ஏழை எளிய மக்கள் தேடிச் செல்கின்றனர்.
ஒரே வாரத்தில் ரத்தப் புற்றுநோயை சரி செய்தேன் என்று கூறும் இவரது வார்த்தையை நம்பி மூலிகை சிகிச்சைக்கு ஏழை எளிய மக்கள் படையெடுத்து வருவதும், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளையும் இங்கு சிகிச்சை அளிப்பது கண்கூடாக காண முடிந்தது.
மூலிகை வைத்திய சிகிச்சையால் நோயாளிகள் குணமடைந்தார்களா? பாதிக்கப்பட்டார்களா? அல்லது உயிரிழப்பு ஏதாவது ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
சமூக வலைத்தளங்களில் அன்னூர் ஐ சேர்ந்த செந்தில்குமார் என்பவர் இந்த சிகிச்சை தவறானது என் தந்தை இங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு தான் இறந்தார் என்று பதிவு செய்துள்ளார். அதேபோல் இங்கு வரும் நோயாளிகளுக்கு வீட்டில் வளர்க்கும் மீன்களுக்கு பயன்படுத்தும் ஆக்சிஜன் கருவிகளை இங்கு வரும் நோயாளிகளுக்கு பயன்படுத்துவதைப் பார்த்தால் சற்று வேடிக்கையாக உள்ளது.
இந்த மூலிகை மருத்துவ சிகிச்சையை வரைமுறைப்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இவர் அளிக்கும் சிகிச்சையால் நோய் குணமடைகிறதா இல்லை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
செய்தியாளர்: எஸ் யோகேஸ்வரன், மேட்டுப்பாளையம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Crime News