கோவை காந்திபுரத்தில் எல்லன் மருத்துவமனை என்ற 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த்து. பிரபல மருத்துவரான ராமச்சந்திரன் (72) நிர்வகித்து வந்த நிலையில், எல்லன் மருத்துவமனையை
சென்னையைச் சேர்ந்த உமாசங்கர்(54) என்ற மருத்துவருக்கு ஓப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கொடுத்தார்.
இதனையடுத்து எல்லன் மருத்துவமனை என்ற பெயரை சென்னை மருத்துவமனை என்று மாற்றி டாக்டர் உமாசங்கர் நடத்தி வந்தார். ஏற்கனவே சென்னையில் சென்னை மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்ததால் அதன் கிளையாக கோவையில் இந்த மருத்துவமனை செயல்பட்டது.
மாத வாடகை 15 லட்சம் ரூபாயும், 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியும் செலுத்த வேண்டும் என மருத்துவர் ராமச்சந்திரனுடன் ஓப்பந்தம் போட்ட நிலையில், உமாசங்கர் கடந்த 2017 முதல் வாடகை தொகையினை முறையாக செலுத்த வில்லை என கூறப்படுகின்றது. 3 ஆண்டுகளாக மருத்துவர் உமாசங்கர் முறையாக வாடகை கொடுக்காமல் காலம் தாழ்த்தியதால், 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ராமச்சந்திரனே கட்டும் நிலை ஏற்பட்டது.
இதனால், 4 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரம் ரூபாயை கொடுக்கும் படி உமாசங்கரிடம் ராமசந்திரன் கேட்டுள்ளார். ஆனால், உமாசங்கர், வேறு ஒருவருக்கு மருத்துவமனையை உள்வாடகைக்கு விட முயற்சித்துள்ளார். 100 கோடி ரூபாய் மதிப்புடைய தனது கட்டிடத்தை அபகரிக்க டாக்டர் உமா சங்கர் முயற்சித்ததால் அதிர்ச்சியடைந்து இது குறித்து கேட்டபோது, உமாசங்கரும், அவரது மேலாளர் மருதவாணன் என்பவரும் சேர்ந்து மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து மருத்துவர் ராமச்சந்திரன் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தை தொடர்ந்து மருத்துவர் உமாசங்கர் மற்றும் மேலாளர் மருதவாணன் ஆகியோர் மீது கொலை மிரட்டல், மோசடி உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த கோவை குற்றப்பிரிவு போலீசார், இருவரையும் கைது செய்து கடந்த 2020 ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையில் அடைத்தனர்.
Also Read : ஒரே ஆண்டில் 7 லாக்அப் மரணங்கள்... தமிழகத்தில் அரசு இயங்குகிறதா? அண்ணாமலை சரமாரி கேள்வி!
பின்னர் ஜாமினில் வெளிவந்த டாக்டர் உமாசங்கர் தினமும் கோவை ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார். கடந்த 23.1.2021 ம் தேதி காலை ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டுவிட்டு கண்ணப்பநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலே டாக்டர் உமாசங்கர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து அந்த சிபிசிஐடி போலீசார் எல்லன் மருத்துவமனையின் உரிமையாளரான பிரபல மருத்துவர் டாக்டர் ராமச்சந்திரனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். அவரை சிபிசிஐடி போலீசார் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த இட விவகாரத்தில் ஆளுங்கட்சி பிரமுகர்களும், சாதிய அமைப்பினரும் பின்னணியில் இருந்த நிலையில் இந்த வழக்கு அரசியல் வட்டாரத்திலும் சூட்டை கிளப்பும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் டாக்டர் ராமசந்திரன் உட்பட 5 பேரை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் 5 பேரும் ஆஜர்படுத்தபட்ட நிலையில், இவர்களை வரும் 27-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.