கோவை மாவட்டத்தில் மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட கடன் மாணவரை கொலை செய்யத் தூண்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மூதாட்டியை திட்டமிட்டு கொலை செய்து விட்டு 14 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கல்லூரி மாணவர் கொலை மறைக்க முயன்ற மாணவர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் 63 வயதான முருகையன். விவசாயியான இவரது மனைவி சரோஜினி. இந்த தம்பதியின் வீடும் தோட்டமும் தனித்தனியாக உள்ளது.இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி மாலை மகன் சுரேஷ் குமார் வீட்டுக்கு சென்று பார்த்தபோது மூதாட்டி சரோஜினி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார்.
பீரோவில் வைத்திருந்த நகைகள் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை கொலை செய்துவிட்டு கொள்ளையை அரங்கேற்றியிருப்பது தெரியவந்தது.
மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர்.இந்நிலையில் தனிப்படை போலீசார் மேட்டுப்பாளையம் தென்திருப்பதி நால்ரோடு பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டுனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருச்சக்கரவாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.பிடிபட்டவர் 19 வயதான வசந்தகுமார் என்பதும், இவர் பிஎஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
விசாரணையில் அவரது கைகளில் சில வெட்டு காயங்கள் இருப்பது தெரியவந்தது.அவரிடம் காயங்கள் குறித்து போலீசார் கேட்டபோது, கல்லூரி மைதானத்தில் விளையாடும் போது தரையில் விழுந்து, கண்ணாடி துண்டுகளால் காயம் ஏற்பட்டதாக பதிலளித்தார். சந்தேகமடைந்த போலீசார் கல்லூரி மைதானத்துக்குச் சென்று சக மாணவர்களிடம் விசாரித்துள்ளனர். இதில் வசந்த் சொன்னது பொய் என்பது தெரியவந்தது.
பின் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளையடித்துச் சென்றதை ஒப்புக் கொண்டார்.அப்போது ஏற்பட்ட கைகலப்பில் அவரது கையில் காயங்கள் ஏற்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.வசந்த் கொடுத்த தகவலின் பேரில், அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14 சவரன் நகைகளையும் மீட்டனர்.
சில மாதங்களாக ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த வசந்த்குமார் அதில் சில லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இழந்த பணத்தை ஈடுகட்டவும், கடன் நெருக்கடியில் இருந்து தப்பிக்கவும் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. வசந்த்குமாரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Crime News