கோவையில் நீதிமன்றம் அருகே ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு பேர் தப்பியோடிய போது , போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர்.
கோவை கீரநத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் இருவரும் பல்வேறு குற்ற வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் தொடர்புள்ள நிலையில் வழக்கின் வாய்தாவிற்காக கோவை நீதிமன்றத்திற்கு நேற்று வந்தனர். நீதிமன்றம் அருகே உள்ள கோபாலபுரத்தில் இருவரும் தேநீர் அருந்திய நிலையில், அவர்களை பின் தொடர்ந்து வந்த 4 பேர் கும்பல் தேநீர் கடை முன்பாக கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் கோகுல் உயிரிழந்த நிலையில், மனோஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அண்டை மாவட்டங்களிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கோகுல் கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேர் கோத்தகிரியில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை கோவைக்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது மேட்டுப்பாளையம் அருகே ஜோஸ்வா மற்றும் கௌதம் ஆகிய 2 இளைஞர்கள் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் காலில் சுட்டுப் பிடித்தனர். இதையடுத்து தற்போது துப்பாக்கியால் சுடப்பட்டவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.
செய்தியாளர்: ஐயாசாமி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Crime News, Local News