கோயம்புத்தூரில் காரில் சிலிண்டர் வெடித்தது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கக் கூடும் என உளவுத்துறை சந்தேகித்துள்ளது.
கோவை உக்கடம் பகுதியில் பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் அருகே ஞாயிறு அதிகாலை நான்கு மணியளவில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபீன் என்பவர் இறந்தார். பழைய துணி விற்பனையாளரான அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கு உதவும் பொட்டாசியம் நைட்ரேட், சல்ஃபர், அலுமினியம் பவுடர், சார்க்கோல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அவரது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, சனிக்கிழமை நள்ளிரவு 11.25 மணிக்கு ஜமேசா முபீனுடன் 4 பேர் இருந்ததும், அவரது வீட்டில் இருந்து ஏதோ ஒரு பொருளை அவர்கள் ஐந்து பேரும் தூக்கிச் சென்றதும் பதிவாகி இருந்தது.
சிசிடிவி காட்சிகளில் உள்ள 4 பேர் யார் என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கார் வெடி விபத்து தொடர்பாக குன்னூரை அடுத்த ஓட்டுப்பட்டரை பகுதியை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து காரில் சிலிண்டர் வெடித்த போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. சிலிண்டர் வெடித்ததில் கார் பல துண்டுகளாக சிதறியது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், காரில் சிலிண்டர் வெடித்தது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என உளவுத்துறை சந்தேகித்துள்ளது. உயிரிழந்த ஜமேசா முபீனின் செல்போன் டிஸ்பிளே படத்தில் இடம்பெற்ற சந்தேகத்திற்குரிய வாசகம் இடம்பெற்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அதில், தான் இறந்ததாக செய்தி கிடைத்தால் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும், குறையை பெரிதாக நினைக்காதீர் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. அதனால், நடந்தது தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காலை 4 மணிக்கு கூட்டம் கூடும் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு இலங்கை தாக்குதலைத் தொடர்ந்து ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய புகாரில் அசாருதீன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவருடன் தொடர்புடைய 8 பேர் விசாரிக்கப்பட்ட போதும், சந்தேகிக்கப்பட்ட ஜமேசா முபீனிடம் விசாரணை நடக்கவில்லை. இந்த சூழலில் தற்போது அவர் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்திருக்கும் நிலையில், அவரது பின்னணி குறித்து காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் வாசிக்க: கோவை கார் வெடிப்பு விபத்தா... சதி வேலையா? - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி!
மேலும் கோவை கார் வெடிப்பு சம்பவத்தைக் தொடர்ந்து, நகர் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினருடன் இணைந்து துப்பாக்கி ஏந்திய அதிவிரைவு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Intelligence report