கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். இதே போல சின்னம்மா தலைமை ஏற்போம் என சசிகலா ஆதரவாளர்களும் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான விவகாரம் தீவிரமடைந்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதாரவாளர்கள் தனித்தனியாக தங்களது ஆதரவினை தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டி இருந்தார். அதில் எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி புகைபடத்துடன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பல இடங்களில் சுவரொட்டிகள் ஓட்டியுள்ளனர். அந்த சுவரொட்டியில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் கட்சி சின்னத்தைப் பெற கையெழுத்து போட மறுத்த எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை ரயில் நிலையம், ஆட்சியர் அலுவலகம், அவினாசி மேம்பாலம், டவுன்ஹால் உட்பட பல்வேறு பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது. இதேபோல சசிகலா ஆதரவாளர்கள் சுந்தராபுரம் , போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் சின்னம்மா தலைமை ஏற்போம் என சசிகலா புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
கோவை நகரில் எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர்செல்வம், சசிகலா ஆதரவாளர்கள் தனித்தனியாக போஸ்டர் யுத்தம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.