கோவையில் தனியார் நிறுவனத்தில் ரூ.43 லட்சம் நூதன முறையில் திருடிய 3 பேர் கைது...
கோவையில் தனியார் நிறுவனத்தில் ரூ.43 லட்சம் நூதன முறையில் திருடிய 3 பேர் கைது...
கோவை - கைதான 3 பேர்
Coimbatore | கோவையில் தனியார் கார் நிறுவன விற்பனை மையத்தின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் திருடப்பட்ட 43 லட்ச ரூபாய் பணத்தை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவான நபர்களைத் தேடி வருகின்றனர்.
கோவைராமநாதபுரம் பகுதியில் பிரசன்னா ஆட்டோ மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கியா கார்ஸ் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் நடத்தி வருபவர் அனீஸ் பிரசன்னா. கடந்த 2019 ம் வருடம் முதல் இராமநாதபுரம் பகுதியில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் அக்கவுன்ட்ஸ் மேனேஜர் சரவணன் என்பவர் கடந்த 30 ம் தேதி நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை சரி பார்த்த போது, நிறுவனத்தின் கணக்கில் இருந்து ரூ.42,98,100 நிறுவனத்திற்கு தொடர்பில்லாத ஒரு நபருக்கு அனுப்பபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து வங்கியை அணுகிய சரவணன் இது குறித்து விசாரித்த போது நிறுவனத்தின் காசோலையை வங்கியில் செலுத்தி RTGS முறையில் ரூ.42,98,100 பணம் திருவண்ணாமலையில் உள்ள மூர்த்தி என்பவரது வங்கி கணக்கிற்கு அனுப்பபட்டு இருப்பது தெரியவந்தது.
காசோலையில் இருந்த பணம் உரிமையாளர் அனீஸ் பிரசன்னாவுடையது இல்லை என்பது வங்கி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த பொழுது 2021ம் ஆண்டு பிரசன்னா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அக்கௌன்ட் பிரிவில் வேலை பார்த்த வெங்கடசுப்பிரமணியம் என்பவர் 2021 ம் ஆண்டு பயன்படுத்தபட்ட காசோலை புத்தகத்தில் இருந்து திருடிய காசோலையை, போலியாக அனிஷ் பிரசன்னாவின் கையெழுத்தை போல போட்டு வங்கியில் செலுத்தி இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் அனீஸ் பிரசன்னா கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். உடனடியாக துணை ஆணையர் பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள மூர்த்தி என்பவருவது வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்பட்டு இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து அந்த கணக்கை முடக்க போலீசார் முயன்றனர். ஆனால் கணக்கில் இருந்து முழு பணமும் எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து தனி படையினர் ஆரணி சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது வெங்கடசுப்பிரமணியம் ஆரணியைச் சேர்ந்த தனது நண்பர் சிவா, தினேஷ் பாபு, கார்த்திக் ஆகியாரை இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தி இருப்பதும், இதற்காக திருவண்ணாமலையை சேர்ந்த மூர்த்தி என்பவரின் வங்கி கணக்கை பயன்படுத்தி காசோலையை மூர்த்தியின் வங்கி கணக்கில் செலுத்தி இருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து திருவண்ணாமலையில் பதுங்கி இருந்த சிவா, கார்த்திக், தினேஷ் பாபு ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்த்துடன் அவர்களிடம் இருந்து ரூ.42,98,100 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மாநகர குற்றப்பிரிவு போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான வெங்கட சுப்பிரமணியம் மற்றும் மூர்த்தி ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.