சென்னை முத்தியால்பேட்டையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நடித்து 2 கோடியே 30 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த வழக்கில் 10 வருடங்களாக கடையில் பணியாற்றிய நபர் மற்றும் பாஜக பிரமுகர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் வசித்து வரும் ஜமால் என்பவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.கடந்த 12ஆம் தேதி ஜமால் வீட்டிற்கு வந்த 4 பேர் கொண்ட குழு தங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு வீடு மற்றும் கடைகளில் சோதனை நடத்தியது.
சோதனைக்குப் பின் வீடு மற்றும் கடையிலிருந்து 2 கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்வதாகக் கூறி எடுத்துச் சென்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய கணக்கை காண்பித்து விட்டு அலுவலகத்திற்கு நேரில் வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்திச் சென்றனர். சில மணி நேரம் கழித்து விசாரித்துப் பார்த்த ஜமால், தன்னுடைய வீட்டிற்கு வந்தவர்கள் என்.ஐ.ஏ அதிகாரிகள் இல்லை என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜமால் இந்த நூதனக் கொள்ளை குறித்து முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மோசடிக் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைத்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, இந்த கொள்ளையில் 4 பேர் மட்டும் இல்லமால், மேலும் சிலர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் கும்பல் தப்பிச் சென்றதும் சிசிடிவி மூலம் அம்பலமானது.போலீசாரின் தீவிர விசாரணையில் கொள்ளைக்கும்பல் ஊட்டியில் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.போலீசார் தங்களைத் தேடுவதை அறிந்த கும்பலைச் சேர்நத் 6 பேர் சில நாட்களுக்கு முன்பு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
பாஜக பிரமுகர் வேலு என்கிற வேங்கை அமரன் உள்ளிட்ட 6 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், கொள்ளை சம்பவத்திற்கான திடுக்கிடும் பின்னணி அம்பலமானது. ஜமாலிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருபவர் சித்திக்.இவரும் இவரது உறவினரும் சேர்ந்து தான் இந்தத் திட்டத்தை தீட்டியது என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையடித்த பணத்தை எங்கெல்லாம் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை கண்டிறிந்த போலீசார் ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டனர்.
மீதமுள்ள 65 லட்சம் ரூபாய் பணத்தை தேடி வருகின்றனர்.6 பேரிடம் நடத்திய விசாரணையில் அடிப்படையில் மேலும் 3 பேரை பிடித்த போலீசார், தலைமறைவாக இருக்கும் 3 பேரை தேடி வருகின்றனர்.கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிறகு சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரகள் சோதனை நடத்தி வருகிறனர். இதனைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் திருட்டை அரங்கேற்றியிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
முதலாளியின் வீட்டில் கட்டு கட்டாக பணம் இருப்பதை தெரிந்து கொண்டு திட்டம் தீட்டி என்.ஐ.ஏ. அதிகாரிகள் என நாடகமாடி இரண்டரை கோடி ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.