சென்னை தாம்பரம் அடுத்த அகரம் தென்பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் (51).இவர் கடந்த மே மாதம் 26ம் தேதியிலிருந்து மாயமானதாக கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி அவரது மகள் ஏஞ்சல் (29) சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி கோவிலாஞ்சேரி காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத பெண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது சிவப்பு ஜாக்கெட்டும், சந்தனகலர் புடவையும் மற்றும் அதன் அருகில் கருப்புநிற ஹேண்ட் பேக்கில் வீட்டின் சாவியும் இருந்தது.
எனவே சடலமாக கிடந்தது காணாமல் போன எஸ்தராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் எஸ்தரின் மகள் ஏஞ்சலை அழைத்து சென்று காட்டிய போது தனது தாய் எஸ்தர் தான் என அவர் அடையாளம் காட்டினார். பின்னர் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிறகு குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் எஸ்தர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து எஸ்தரின் செல்போனின் ஐ.எம்.இ.ஐ நம்பரை வைத்து விசாரணை மேற்கொண்டதில் இறந்த நபர் பயன்படுத்திய செல்போனை ஆறு மாதம் கழித்து தற்போது ஒருவர் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
இதையும் படிங்க | நகை திருட்டு.. இருட்டு அறை.. ரூமுக்குள் ஒவ்வொருத்தராக அனுப்பப்பட்ட அரசு ஊழியர்கள்!
எனவே செல்போனை பயன்படுத்தி வரும் நபர் தான் எஸ்தரை கொலை செய்திருப்பார் என சந்தேகத்தில் போலீசார் செல்போனை பயன்படுத்தி வந்த சேலையூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மதுரபாக்கம் பகுதியை சேர்ந்த லோகநாதன் (20) என்பவர் தனக்கு செல்போனை கொடுத்தாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து லோகநாதனை போலீசார் தேடிவந்த நிலையில் அவர் வழக்கமாக மது அருந்தும் அகரம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தார்.
அவரை மடக்கி பிடித்து சேலையூர் காவல் நிலையத்தில் அழைத்து சென்று முறைப்படி விசாரணை செய்ததில் சம்பவத்தன்று தான் குடித்துவிட்டு போதையில் தனது வீட்டிற்கு கோவிலாஞ்சேரி காட்டுபகுதி வழியாக சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் ஒரு பெண் தனியாக நின்று பூ பறித்துக் கொண்டிருந்ததாகவும் அப்போது மது அருந்துவதற்கு பணம் இல்லாததால் அப்பெண்மணியிடம் பணம் கேட்டபோது பணம் தர மறுத்தது மட்டுமல்லாமல், அந்த பெண் சத்தம் போடவே தான் அவரை கீழே தள்ளி கழுத்தில் கால் வைத்து மிதித்து கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவரிடம் இருந்த செல்போன் ஒன்றும், அவரது ஹேண்ட் பேக்-ல் இருந்த 700 ரூபாயையும் எடுத்து கொண்டு தப்பி சென்றதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: சுரேஷ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Murder, Tambaram