சென்னை பெரம்பூர் பட்டேல் ரோடு. பகுதியில் கண்ணைய்யா லால் ஜெயின் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பெண் ஒருவர் தாலி செயினில் உள்ள நகைகளை அடகு வைக்க வந்துள்ளார். மருத்துவ தேவை அவசரமாக பணம் வேண்டும் என்பதால் தாலியில் உள்ள குண்டுகளை அடமானம் வைத்துள்ளார்.
தாலியில் உள்ள நகைகள் என்பதால் உரசிப்பார்த்தால் சேதாரமாகிவிடும் என கூறி செண்டிமெண்டாக பேசியுள்ளார். மேலும் நகை அடகு வைக்க ஆதார் கார்டு நகல் கொடுக்குமாறு கேட்கும் போது, நாளை எடுத்து வருவதாக கூறியுள்ளார். 40 ஆயிரம் ரூபாய் கேட்ட நிலையில், அடகு கடைக்காரர் 20 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். மீதமுள்ள 20 ஆயிரம் ரூபாயை நாளை ஆதார் கார்டை கொடுத்துவிட்டு வாங்கி செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து பணத்தை வாங்கி சென்ற பெண், மறுநாள் ஆதார் கார்டு எடுத்து வரவில்லை. கண்ணையா லால் ஜெயினுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் நகையை சோதனை செய்து பார்த்த போது அது போலி நகை என தெரிய வந்துள்ளது. உடனடியாக செம்பியம் காவல் நிலையத்தில் கண்ணையா லால் ஜெயின் புகார் அளித்தார். புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் அடகு கடை உரிமையாளர்கள் வைத்திருக்கும் வாட்ஸ் அப் க்ரூப்பில், தனது அடகு கடையில் மோசடி செய்த பெண்ணின் சிசிடிவி காட்சியை வைத்து எச்சரிக்கை பதிவிட்டுள்ளார்.
அந்த வாட்ஸப் க்ரூப்பில் உள்ள சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியை சேரந்த அடகு கடை உரிமையாளர் சுரேந்தர்குமாருக்கு (52), தனது அடகு கடையிலும் இதே போன்று ஒரு வாரத்துக்கு முன்பு பெண் ஒருவர் நகை அடகு வைத்து சென்றது நினைவில் வந்துள்ளது. கடைக்கு வந்த பெண் 7 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று சென்ற நிலையில், பெண் கொடுத்த நகையை சந்தேகத்தில் சோதனை செய்த போது அது போலி நகை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
அடகு கடை உரிமையாளர் சுரேந்தர் இது குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து மோசடி செய்த பெண்ணை கண்டுபிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் கீழ்பாக்கம் ஏ.கே நகரை சேர்ந்த மகாலட்சுமி (33) என்பதும் இவர் ஒராண்டு முன்பு ஓமந்தூரார் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் டைப்பிஸ்டாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், பிடிபட்ட மகாலட்சுமி இதே போல் செம்பியம், திருவிகநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலி நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மகாலட்சுமியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2500 பணம், 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், 14 வருடத்துக்கு முன் திருமணமானதாகவும் திருமணம் ஆன ஒரு வருடத்தில் கணவர் குழந்தையை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து சென்றதால், மகனை வளர்க்க காசு இல்லமால் கஷ்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 8 ஆம் வகுப்பு படிக்கும் மகனின் படிப்புக்காக மோசடி செய்து கல்வி கட்டணம் செலுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இவ்வாறு போலி நகையை அடகு வைத்து பெற்ற பணத்தில் தன்னை அழகாக காட்டி கொண்டதாகவும் இதன் மூலம் பல சின்னத்திரை தொடர்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நாடகங்களிலும் மற்றும் விளம்பரங்களில் நடித்து வருவதாகவும் தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் பல இடங்களில் இவர் கைவரிசை காட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பிறகு அரும்பாக்கம் போலிசார் எழும்பூர் 5 வது கூடுதல் நீதிமன்றத்தில் மகாலட்சுமியை ஆஜர் படுத்தினர். மகாலட்சுமியின் வாக்குமூலத்தை படித்த நீதிபதி, மகனின் படிப்புக்காக மோசடி செய்ததை ஒப்புக்கொண்டதால் அதன் அடிப்படையில் மகாலட்சுமியை எச்சரித்து மட்டும் அனுப்பியுள்ளனர். இருப்பினும் செம்பியம் ,திருவிக நகர் பகுதியில் மோசடி ஈடுபட்டதாக புகார் இருப்பதால், அந்த வழக்கு தொடர்பாக போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Fraud, Gold loan