ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நகை வியாபாரிகளான சுப்பாராவ் மற்றும் ரகுமான் ஆகியோர் சவுகார்பேட்டை பகுதியில் தங்கம் வாங்குவதற்காக கடந்த 3ம் தேதி வந்துள்ளனர். அப்போது அதிகாலை சென்னை சென்ட்ரல் வந்து அங்கிருந்து ஆட்டோ மூலம் யானை கவுனி பகுதிக்கு சென்று பின்னர் நடந்து வீரப்பன் சாலை வழியாக சென்றுள்ளனர். அப்போது இவர்களை பின் தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று தாங்கள் போலீசார் எனக்கூறி அவர்களிடம் இருந்த ரூபாய் ஒரு கோடியே 40 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றது.
இந்த சம்பவம் குறித்து யானை கவுனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அந்த வகையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கொடுங்கையூரைச் சேர்ந்த பிரபல ரவுடியான இம்ரான் என்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த 10ம் தேதி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இம்ரானின் சகோதரர் இம்ராஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இம்ராஸ் அளித்த தகவலின்பேரில் நீலகிரி மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி இம்ரான் மற்றும் சேலம் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த மற்றொரு நபர் என இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி இம்ரானிடமிருந்து ரூபாய் 60 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். செய்யப்பட்ட முக்கிய கொள்ளையன் இம்ரானிடம் நடத்திய விசாரணையில், குருவி, ஹவாலா ஆகியவற்றில் ஈடுபடும் நபர்களை குறிவைத்து ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரியவந்தது.
இதேபோல் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இம்ரான் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. கொள்ளையடித்த பின்பு போலீசாரிடம் நெருங்காமல் இருக்க பல யுக்திகளை கையாண்டு தலைமறைவாக இருந்து வருவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் இம்ரான் கொள்ளையடித்த பணத்தை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்திற்கு வழங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக தமிழகத்தையே உலுக்கிய அம்பத்தூர் இந்து முன்னணி சுரேஷ் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய பயங்கரவாத குற்றவாளிகளுக்கு இம்ரான் பண உதவி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 60 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து 2 வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், மீதமுள்ள பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இடம் குறித்தும், வேறு எந்த கொள்ளை சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Local News