சென்னை கே.கே.நகர், வடபழனி, அசோக் நகர், மாம்பலம் உள்ளிட்ட தி.நகர் காவல் மாவட்ட பகுதிகளில் கடந்த 12, 13ம் தேதிகளில், மொத்தம் 17 பேரிடம் செல்போன் பறித்த சம்பவம் சென்னை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தியாகராய நகர் துணை ஆணையர் தனிப்படை போலீசார் விசாரணையில் களமிறங்கினர். சுமார் 200 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து,இந்த வழக்குகளில் வியாசர்பாடி, எம்கேபி நகர் பகுதிகளை சேர்ந்த அஜய், சபியுல்லா விக்கி, கிருபா, நாகூர் மீரான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 17 செல்போன்கள் மீட்கப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டுபிடித்தனர். அதன்படி சைனா பஜாரில் செல்போன் கடை நடத்தி வரும் நாகூர் மீரான் வழிப்பறி செய்யப்பட்ட செல்போன்களை வழிப்பறி கொள்ளையர்களிடமிருந்து குறைவான விலைக்கு வாங்கி IMEI நம்பரை மாற்றி புது செல்போனாக இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு குருவி மூலம் விற்பனை செய்வதும் தெரியவந்தது.
இதனால் சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடிக்க முடியாத அளவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழிப்பறி செய்யப்பட்ட செல்போனை புதிய செல்போனாக மாற்றி வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. நாகூர் மீரான் செல்போன் விற்பனை செய்த பணத்தை அனுப்பும் வங்கிக் கணக்கை ஆய்வு மேற்கொண்டபோது சையது யாமின் பாஷா என்பவரது வங்கி கணக்கிற்கு சென்றது தெரியவந்துள்ளது. தொடர் விசாரணையில் சையது யாமின் பாஷா மீது நாட்டு வெடிகுண்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
திரைப்படங்களில் வழிப்பறி காட்சிகள்போல் செல்போன் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களை நிகழ்த்தி சிக்காமல் எப்படி செல்வது என்பது குறித்து ரூட்டு போட்டுக் கொடுத்து பயிற்சி அளிக்கும் கில்லாடி சையது யாமின் பாஷா என்பது தெரியவந்தது. இவ்வாறு கிடைக்கும் பணத்தை செல்போன் பறிப்பில் மற்றும் செயின் பறிப்பில் ஈடுபடும் வாலிபர்களுக்கு கஞ்சா போதை விலை உயர்ந்த ஆடைகள் உல்லாச வாழ்க்கை என பணத்தை அள்ளிக் கொடுத்து இதுபோன்று தொடர் வழிப்பறியில் ஈடுபடுத்த மூளைச்சலவை செய்ததும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து 3 ஆண்டுகளாக சிக்காமல் சையது யாமின் பாஷா தலைமறைவாக இருந்து வருவதாகவும், தலைமறைவாக இருந்து கொண்டே தன் கட்டுப்பாட்டில் உள்ள வாலிபர்களை பயன்படுத்தி தொடர்ந்து பல்வேறு வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, செல்போன் சிக்னல் மூலம் சையது யாமின் பாஷாவை பிடிக்காமல் இருப்பதற்கு, வாட்ஸ்அப் கால் மூலமாகவும், வி.பி.என் சாஃப்ட்வேர் மூலமாக கால் செய்தும் வழிப்பறி சம்பவங்களை நிகழ்த்தி வந்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கி அதன் மூலமாக வழிப்பறியில் ஈடுபடும் வாலிபர்களுடன் சாட் செய்தும், இன்ஸ்டாகிராம் மூலமாக கால் செய்தும் எந்த இடத்தில் எவ்வாறு செயின் மட்டும் செல்போன் பறிப்பு சம்பவங்களை நிகழ்த்த வேண்டும் என்பதை ரூட்டு போட்டு சையது யாமீன் பாட்ஷா தருவதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனால், போலீசாரின் கையில் சிக்காமல் பல ஆண்டு காலமாக தப்பித்து வந்த சையது யாமீன் பாட்ஷா பயன்படுத்தும் செல்போன் நெட்வொர்க்கை பயன்படுத்தி அவர் இருக்கும் இடத்தை போலீசார் நூதன முறையில் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
மேலும், கைதான சபியுல்லா செல்போன் மற்றும் செயின் பறிப்புக்காக தனது வாகனத்தை பிரத்தியேகமாக தயார் செய்து வாலிபர்களுக்கு கொடுப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களில் அஜய், விக்கி இருவரும் சமீபத்தில் தான் சிறையில் இருந்து வெளிவந்துள்ளனர். வந்தவுடன் தி.நகர், கே.கே.நகர், வடபழனி பகுதியில் வழிப்பறி செய்யுமாறு இன்ஸ்டா மூலம் ஆர்டர் கொடுத்தவுடன் கஞ்சா போதையில் இரண்டு தினங்களில் வெறித்தனமாக 17 செல்போன் பறித்துள்ளனர் என்பது போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேபோல் அடையாறு காவல் மாவட்டத்திலும் கைவரிசை காட்டி செல்போன் பறிப்பு சம்பவங்களில் சையது யாமின் பாட்ஷா ஈடுபட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஆர்டர் கஞ்சா போதையில் வழிப்பறிக் கொள்ளை உல்லாச வாழ்க்கை என வாழ்ந்த செல்போன் பறிப்பின் ரூட்டு தல சையது யாமின் பாஷாவின் கும்பலை சாதுரியமாக விசாரணை நடத்தி கூண்டோடு கைது செய்த தனிப்படை போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Local News