அதிமுக அலுவலகத்துக்குள் சில சமூக விரோதிகள் நுழைந்துள்ளனர் என்று அ
திமுக இடைக்காலப் பொதுச் செயலாளர்
எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருதரப்பினரும் எதிர் எதிரே நின்றுக்கொண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதலில் ஒரு சிலர் காயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்ததும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் அத்துமீறி நுழையக் கூடும் என்று கூறி காவல்நிலையத்தில் மனு கொடுத்தோம். எனவே, அதிமுக தலைமை கட்சி அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரினோம். ஆனால், காவல்துறையினர் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அதனால், அதிமுக அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
அதிமுக கட்சியின் தலைவராக இருந்தவர், முன்னாள் துணை முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவரே ரவுடிகளை அழைத்துக் கொண்டு வந்து கட்சியின் நிர்வாகிகளை தாக்கியுள்ளார். ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் இப்படி செய்யலாமா?
இது குறித்து அதிமுக சார்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க விருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்து முக்கிய ஆவணங்களையும் அள்ளிச் சென்றுள்ளனர். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களும் அதிமுக தொண்டர்களையே தாக்கியுள்ளனர். ரவுடிகளைத் தாக்கவில்லை. காவலர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். திமுக அரசும், ஓ.பன்னீர்செல்வமும் கைக்கோர்த்து இதனை செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காலம் மாறும்போது தக்க பாடம் புகட்டுவோம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் ஒரு சுயநலவாதி என்றும், பொதுக்குழு கூட்டத்தில் அவருக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்திருந்தோம் ஆனால் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.