பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு பயத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் கோயில் மற்றும் பெரிய பாளையத்து அம்மன் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சென்னை ராயப்பேட்டை சித்தி புத்தி விநாகயகர் கோயில், பெரியபாளையத்து அம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டோம். சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் நகர்ப்புற பகுதிகளில் கோயில்களை புனரமைக்க 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி சித்தி புத்தி வினாயகர் கோயில், பெரியபாளையத்து அம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட பின் திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் நேரடியாக சென்று விசாரணை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மேலும் அதிகாரிகளை ஆய்வு செய்ய மறுக்கப்பட்டு உள்ளதை பதிவு செய்துள்ளோம் என்றும் சட்டபூர்வமாக அவர்கள் மீது படி படியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆணையருடன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு பயத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதால் ஆதினங்கள் கோரிக்கைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டது என விளக்கமளித்தார். எதிர்காலங்களில் பட்டின பிரவேசம் போன்ற நிகழ்வுகளுக்கு சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என கூறினார்.
தருமபுரம் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு அனுமதி அளித்தன் மூலம் எதிர்காலத்தில் இந்து அமைப்புகள் அரசு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது என திராவிடர் கழக கீ.வீரமணி தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளித்த அமைச்சர், கீ.விரமணி அவரது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். ஆத்திகர், நாத்திகர் என அனைவருக்குமான அரசாக உள்ளது என கூறினார்.
ஆர்.ஏ. புரம் பகுதியில் தனி நபர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்து உள்ளோம். யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.