சென்னை அருகே ஆண் நண்பர்களுடன் காரில் சென்ற ஐடி பெண் ஊழியர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த காயத்ரி (26) துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதேப்போல் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 29 வயதான அஷ்வின் பள்ளிக்கரணை பகுதியில் நண்பர்களுடன் தங்கி வீட்டிலிருந்தே ஐடி வேலை செய்து வருகிறார்.
அவருடைய நண்பரான, உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 28 வயதான தினேஷ்குமார் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான ரகுராம் போரூரில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் அனைவருமே நண்பர்கள். முன்னதாக, ரகுராம் மற்றும் காயத்திரி தென்காசி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் நண்பர்களாகியுள்ளனர்.
இந்நிலையில் ரகுராம், காயத்திரி, ரகுராமின் நண்பர்களான தினேஷ்குமார், அஸ்வின் ஆகிய நான்கு பேரும் அஸ்வின் காரில் கோவளம் வரை 4 பேரும் சென்றுள்ளனர். கோவளத்தில் இருந்து நள்ளிரவில் வண்டலூர் பிரதான சாலை வழியாக சென்று பின்னர் மாம்பாக்கம்-மேடவாக்கம் பிரதான சாலையில் பள்ளிக்கரணையில் உள்ள விடுதிக்கு ஹோண்டா சிட்டி காரில் சென்றுள்ளனர்.
அஷ்வின் காரை ஓட்டி சென்ற நிலையில் மதுரப்பாக்கம் பகுதியில் சாலையின் தடுப்பு சுவற்றில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான கார் தலை குப்புற கவிழ்ந்ததில் காரில் சென்ற நான்கு பேரும் காருக்குள் சிக்கிக் கொண்டனர். விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் காரில் சிக்கிக்கொண்ட காயத்ரி, அஷ்வின், ரகுராம், தினேஷ்குமார் ஆகியோரை மீட்டனர். 4 பேரையும் பரிசோதனை செய்ததில், காயத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மற்ற மூன்று பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மருத்துவமனையில் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும அஷ்வின், ரகுராம், தினேஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் அஷ்வின் காரை அதிவேகமாக ஓட்டியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நடைபெற்றதாக கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காரில் பயணித்தவர்கள் மது அருந்தி இருந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் இதே போன்று அரங்கேறிய ஒரு சம்பவத்திலும் ஐடி பெண் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து நண்பர்கள் மது அருந்தி விட்டு இரவு நேரத்தில் லாங் டிரைவ் செல்வதால் இது போன்ற சம்பவங்கள் வாடிக்கையாகி வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர்: ப. வினோத்கண்ணன், இசிஆர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accident, Chennai, Crime News, Death