சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் சோட்டா வெங்கட்ராமன். காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவர் சினிமா பைனான்சியராகவும் இருக்கிறார். இந்நிலையில், தன்னிடம் வேலை பார்க்கும் இரு நபர்களோடு நொளம்பூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது போலீசாரிடம் தன்னிடம் வேலை பார்த்த பாபுஜி என்பவரை கொலை செய்து, உடலை எரித்து விட்டதாகவும், எப்படியும் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்பதால் சரண் அடைய வந்திருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொலை செய்யப்பட்ட பாபுஜி என்பவர் அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர். கடந்த 7 மாதங்களாக சோட்டா வெங்கட்ராமனிடம் கலெக்ஷன் ஏஜென்டாக பணிப்புரிந்து வந்துள்ளார். வேலையில் இருக்கும்போது சோட்டா வெங்கட்ராமனிடம் கடனாக 2 லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார். மேலும் அவரது வீட்டில் இருந்து சிறுக சிறுக 21 கிராம் தங்க நகையையும் பாபு திருடியிருக்கிறார்.
மேலும், பணம், நகையை திருப்பிக் கேட்டபோது அதனை தராமல் இழுத்தடித்ததோடு, சோட்டா வெங்கட்டை பற்றி அவதூறாக தகவல் பரப்பியுள்ளார். இதுகுறித்து நொளம்பூர் காவல் நிலையத்தில் 4 மாதங்களுக்கு முன்பாகவே சோட்டா வெங்கட் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இருவரையும் அழைத்து சமாதானம் பேசிய போலீசார், பாபுவிடம் பணத்தை திரும்ப தரக்கோரி எழுதி வாங்கி அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு பணத்தை தராமல் பாபு தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே பாபு நிற்பதை நவீன் என்பவர் பார்த்துள்ளார். இதையடுத்து, பாபுவை காரில் ஏற்றி நொளம்பூர் எஸ்.பி கார்டன் பகுதியில் உள்ள சோட்டா வெங்கட்டின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் வீட்டின் 2வது தளத்தில் உள்ள தனி அறையில் பாபுவை அடைத்து வைத்து, அவரை நிர்வாணமாக்கி, இரும்பு ராடால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இரவு முழுவதும் பணத்தை கேட்டு டார்ச்சர் செய்ததில் பாபு உயிரிழந்து விட்டார்.
கொலையை மறைக்க திட்டமிட்ட சோட்டா வெங்கட், பாபுவின் உடலை பார்சல் செய்து, காரில் கொண்டு சென்றார். கொளப்பாக்கம் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் உடலை போட்டு சோட்டா வெங்கட் ராமன் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். எப்படியும் போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என்ற பயத்தில் வழக்கறிஞர்களுடன் வந்து நொளம்பூர் காவல் நிலையத்தில் சோட்டா வெங்கட்ராமன் சரண் அடைந்துள்ளார். கொலை மற்றும் உடலை மறைக்க உதவி செய்த திலிப், சரவணன், கோபால் ஆகியோரும் சரண் அடைந்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 4 பேரையும் நொளம்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும், கொளப்பாக்கம் பகுதிக்கு மோப்ப நாய்களுடன் சென்ற போலீசார் பாதி எரிந்த நிலையில் இருந்த பாபுவின் உடலை கைப்பற்றி அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் நவீன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Local News