முகப்பு /செய்தி /சென்னை / 13 அழகிகளுடன் உல்லாச நடனம்... நடுக்கடலில் சொகுசு வாழ்க்கை! - பலே கொள்ளையன் இம்ரான் சிக்கியது எப்படி?

13 அழகிகளுடன் உல்லாச நடனம்... நடுக்கடலில் சொகுசு வாழ்க்கை! - பலே கொள்ளையன் இம்ரான் சிக்கியது எப்படி?

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

Chennai crime news | சென்னை அருகே போலீஸ் என கூறி பணத்தை கொள்ளையடித்து நடுக்கடலில் சொகுசு கப்பலில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை சவுகார்பேட்டையில் கடந்த 3-ம் தேதி அதிகாலை ஆந்திராவில் இருந்து நகை வாங்குவதற்காக வந்த நகை வியாபாரிகளான சுப்பாராவ் மற்றும் ரகுமான் ஆகிய இருவரிடமிருந்து ஒரு கும்பல் போலீஸ் என கூறி அவர்கள் கொண்டு வந்திருந்த ரூபாய் ஒரு கோடியே 40 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது. இதுவரை இந்த கொள்ளை சம்பவத்தில் இம்ரான், இம்ராஸ், இல்தியாஸ், மும்தாஜ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மாதவன், இமானுவேல், அன்பரசன், ராஜேஷ், அசோக், பாஷா,  பாஷாவின் மனைவி ஆலிஷா என 11 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆலிஷா கைக்குழந்தையுடன் இருந்ததால் அவரை நீதிமன்ற பிணையில் மேஜிஸ்ட்ரேட் விடுவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் இம்ரான் தான் முக்கிய குற்றவாளி என்பதும் கொள்ளை கும்பல் தலைவன் என்பதும் தெரிய வந்தது. இவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு, சிபிசிஐடி, வேலூர், தஞ்சாவூர், விழுப்புரம், குடியாத்தம், தாம்பரம், கொடுங்கையூர், வியாசர்பாடி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணம் பறித்தல் வழிப்பறி ஹவாலா ஆள்கடத்தல் உள்ளிட்ட 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் வரை வழிப்பறி வழக்கு ஒன்றில் இம்ரான் சிறையில் இருந்துள்ளார். அங்கு இதேபோல போலீஸ் என கூறி வழிப்பறி செய்த வழக்கில் சிறையில் இருக்கும் இவரது கூட்டாளி ஒருவர் பிப்ரவரி 2-ம் தேதி ஆந்திராவிலிருந்து இருவர் நகை வாங்குவதற்காக சவுகார்பேட்டை வரவுள்ளதாகவும் அவர்கள் எந்த ரயிலில் வருவார்கள், யாரிடம் நகை வாங்க போகிறார்கள் என இம்ரானுக்கு தகவல் சொல்லியுள்ளார்.

இந்த தகவலின் அடிப்படையில்தான் பிப்ரவரி 3ம் தேதி அதிகாலை ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரிகளான சுப்பாராவ் மற்றும் ரகுமான் ஆகியோரிடம் இருந்து ரூ.1.40 கோடி பணத்தை போலீஸ் என கூறி கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையடித்த பணத்தில் இம்ரான் நேராக கோவாவுக்கு சென்று அங்குள்ள பாரில் அனைவரையும் வெளியேற்றி, 13 மாடல் அழகிகளை புக் செய்து விடிய விடிய நடனமாட வைத்தும் விலை உயர்ந்த மதுபானங்களை குடித்தும் கும்மாளமடித்துள்ளார். அதேபோல கோவா பகுதியில் சொகுசு படகை வாடகைக்கு எடுத்து அதில் வெளிநாட்டு பெண்களுடன் நடுக்கடலுக்குச் சென்று சந்தோஷமாக இருந்துள்ளார் என்பதும் இதே போல கொள்ளையடித்த பணத்தில் ரூ. 25 லட்சத்தை சில தினங்களிலேயே செலவழித்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

15க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய இம்ரான், அனைத்து வழக்குகளில் இருந்தும் தப்பிக்க கொள்ளையடித்த பணத்திலேயே BA.BL சட்டப் படிப்பை முடித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. தான் கொள்ளையடித்த பணத்தில் வழக்கறிஞர்களுக்கு தனியாக தொகை ஒதுக்கி தொடர்ந்து அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்களை நிகழ்த்தியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அந்த வகையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மாதவன் தற்போது சவுகார்பேட்டையில் நடந்த கொள்ளை சம்பவத்திற்கு திட்டமிட்டு கொடுத்ததும் இதற்கு முன் நடந்த கொள்ளை சம்பவங்களில் கொள்ளையர்களுக்கு உதவியாக இருந்ததும் தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவத்தின் தலைவனான இம்ரான் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடும்போது கீழே விழுந்து ஒரு கை முறிந்தது.

இந்த கொள்ளை சம்பவத்தில் இதுவரை ரூ.70 லட்சம் பணம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், 21 கிராம் தங்க நகை, கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 70 லட்சம் பணம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் தங்க நகைகள் ஆகியவற்றை போலீசார் இன்று காட்சிப்படுத்தினர். மேலும், குற்றவாளிகளை விரைந்து பிடித்த பூக்கடை காவல் உதவி ஆணையர் தனிப்படையினரை காவல்துறை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற மூன்று நபர்களை தேடி வருகின்றனர்.

First published:

Tags: Cheating, Chennai, Crime News