அரசு மருத்துமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டுமே குறிவைத்து 200 க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு செவிலியர் செல்போன் திருடுபோனது குறித்த புகாரின் பேரில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். விசாரணையில் மூன்று செல்போன்கள் திருட்டு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபர் தான் என தெரிய வந்தது.
இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரை பர்மா பஜாரில் சுற்றிவந்த போது கைது செய்தனர். பின்னர் போலீசார் விசாரணையில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மட்டுமே குறிவைத்து இவர் கடந்த 5 ஆண்டுகளாக செல்போன் திருட்டில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
குறிப்பாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, திருவள்ளூர் அரசு மருத்துவமனை, திருப்பதி அரசு மருத்துவமனை தமிழகம், ஆந்திரா என பல பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளை மட்டுமே குறிவைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் செல்போன்களை திருடி வந்துள்ளார் என தெரிய வந்தது.
முனியாண்டி மாற்றுத்திறனாளி என்பதால் மருத்துவம் பார்ப்பதாக கூறி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் செல்போன்களை தொடர்ச்சியாக திருடி வந்துள்ளார். குறிப்பாக மருத்துவமனை செல்லும் போது கையில் ஒரு நோட்டுடன் சென்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் சிகிச்சை தொடர்பாக பேசும்போது எதிர்பாராத நேரத்தில் அவர்களின் செல்போன்களை நோட்டை வைத்து மூடி திருடி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
முனியாண்டி கடந்த ஏப்ரல் மாதம் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவர் ஒருவரிடம் செல்போன் திருடிய வழக்கில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் மூன்று மாதத்துக்கு முன் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்
சிறையிலிருந்து வெளியே வந்த மூன்று மாதங்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டுமே 32 செல்போன்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் திருடியுள்ளார் என்பதும் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்திள்ள அரசு மருத்துவமனைகள் என மொத்தமாக 200 க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்களை திருடியுள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் திருடிய செல்போன்களை பர்மா பஜார் மற்றும் ரிச் தெருக்களில் ரூ.2,000 முதல் ரூ.5,000 விலைக்கு விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து மதுகுடித்து சொகுசாக வாழ்ந்து வந்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடும்ப பிரச்சனையின் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் முனியாண்டி ஈடுப்பட்டுள்ளார். அப்போது ஒரு கையை துண்டித்து மருத்துவர்கள் முனியாண்டியை காப்பாற்றியுள்ளனர். தனது கையை அகற்றியதால் மருத்துவர்களை தனக்கு பிடிக்காது எனவும் அதனால் அவர்கள் செல்போன்களை மட்டுமே திருடி வருவதாகவும் பொதுமக்கள் செல்போன்களில் கை வைக்க மாட்டேன் எனவும் முனியாண்டி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட முனியாண்டியை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், பர்மா பஜார் மற்றும் ரிச்சி தெருவில் விற்கப்பட்ட செல்போன்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.